50 போலி நிறுவனங்கள் மூலம் இமாலய வரி ஏய்ப்பு செய்தது சசிகலா குடும்பம்? விழிபிதுங்கும் விவேக்
போலி நிறுவனங்கள் மூலம் சசிகலா குடும்பம் இமாலய வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: 50 போலி நிறுவனங்கள் மூலம் நாட்டையே அதிரவைக்கும் இமாலய வரி ஏய்ப்பு செய்திருக்கிறது சசிகலா குடும்பம் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். போலி நிறுவனங்கள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருப்பதால் விசாரணை வளையத்தைவிட்டு வெளியே வர முடியாமல் விவேக் விழிபிதுங்கிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
கருப்புப் பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் மடை மாற்றுவதை கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது சசிகலா குடும்பம். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இத்தகைய டுபாக்கூர் நிறுவனங்கள் சுட்டிக்காட்டப்பட்டும் இல்லை.

ஏகப்பட்ட வங்கி கணக்குகள்
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏகப்பட்ட போலி நிறுவனங்கள், ஏகப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு நாட்டையே அதிர வைக்கும் இமாலய வரி ஏய்ப்பு செய்திருக்கிறது சசிகலா குடும்பம் என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இது தொடர்பான ஆவணங்கள் பெரும்பாலும் இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில்தான் வசமாக சிக்கி இருக்கின்றன.

பொறியில் சிக்கிய விவேக்
இதனால்தான் கடந்த 5 நாட்களாக இடைவிடாத இருவரது வீட்டையும் அங்குலம் அங்குலமாக முகாம் போட்டு ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். குறிப்பாக சர்ச்சைக்குரிய ஜாஸ் சினிமாஸை வளைத்துப் போட்டதில் தப்பவே முடியாத பொறிக்குள் சிக்கியிருக்கிறாராம் விவேக்.

சிக்கிய கிருஷ்ணபிரியா
ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் விவகாரங்களில் வசமாக சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார் விவேக் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். அதேபோல்தான் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் வலுவான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

சொத்துகளும் முடக்கம்
தற்போது விசாரணைக்குள்ளாக்கி இருக்கும் 355 பேரையும் நேரில் அழைத்து மிக நீண்ட விசாரணையை நடத்தவும் ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம் வருமான வரித்துறை. இந்த விசாரணை முடியும்வரை அனேகமாக அத்தனை சொத்துகளும் முடக்கப்படும் போது சசிகலா குடும்பத்துக்கு நிச்சயம் பேரதிர்ச்சியாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications