நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் முக்கிய சந்திப்பு! வேலுமணியை சந்தித்த விஜய்! இபிஎஸ்-ஐ புறக்கணித்தார்
சென்னை: முதல்வராகப் பதவியேற்ற விஜய் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி இப்போது அதிமுகவின் வேலுமணியை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார். அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், அவரை சந்திக்காத விஜய், வேலுமணி- சிவி சண்முகம் தரப்பை மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ம் தேதி வெளியானது. அதில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 10ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை விஜய் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

விஜய்
தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் நேற்றைய தினமே முதலில் திமுக தலைவரும் மாஜி முதல்வருமான ஸ்டாலின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றார். அவரை வீட்டு வாசலுக்கே வந்து துணை முதல்வர் உதயநிதி வரவேற்றார். மேலும், ஸ்டாலினும் முதல்வர் விஜய்க்கு கட்டித்தழுவி வரவேற்றார். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தொடர்ந்து பாமக, மதிமுக, நாதக உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சந்திப்பு
இருப்பினும், நேற்று அதிமுக தரப்பில் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுக இரு பிளவுகளாக இருக்கும் சூழலில், இதன் காரணமாகவே விஜய் யாரையும் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் அதிமுக வெளிப்படையாகவே இரண்டாகப் பிளவுபட்டது. ஒரு பக்கம் எஸ்.பி. வேலுமணி- சிவி சண்முகம் தரப்பு விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் தரப்படும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவையில் பங்கு தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.
அதேநேரம் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசுக்கு ஆதரவில்லை எனச் சொல்லியுள்ளது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் ஒருவேளை மாறி வாக்களித்தால் எம்எல்ஏ பதவிக்குப் பறிக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தனர். இதற்கிடையே அதிமுகவின் வேலுமணி - சிவி சண்முகம் தரப்பைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.
ஏன் முக்கியம்
மற்ற தலைவர்களைச் சந்தித்தது போல இதை வெறுமன மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்ல.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கலகம் செய்து, விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அணியின் முக்கியத் தூணாக வேலுமணி இருக்கிறார். நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் ஆட்சியை உறுதி செய்ய வேலுமணியின் ஆதரவு மிக முக்கியமானது.
எடப்பாடி பழனிசாமி
மேலும், நேற்று அனைத்துத் தலைவர்களையும் சந்தித்த விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, இன்று வேலுமணியைச் சந்தித்திருப்பது அதிமுகவுக்குள் இருக்கும் பிளவை விஜய் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது போலவே தெரிகிறது.
முன்னதாக இந்தச் சந்திப்பின்போது லால்குடி எம்எல்ஏவும் லாட்டரி மார்டின் மனைவியுமான லீமா ரோஸும் உடன் இருந்தார். அப்போது விஜய்யை சந்தித்த லீமா ரோஸ், அவரது கைகளை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டார். இது தொடர்பான வீடியோவும் கூட இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications