தமிழக நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் வீடு, அலுவலகங்களில் ஐடி சோதனை.. 120 கோடி பறிமுதல்
அருப்புக்கோட்டை சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு ஆபரேஷன் பார்க்கிங் என பெயரிடப்பட்டுள்ளது.
Recommended Video

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செய்யாதுரை. இவர் சாலை ஒப்பந்ததாரராக உள்ளார்.
இந்நிலையில் இவரது வீடு, அலுவலங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐடி அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐடி ரெய்டு
அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார்
சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஒப்பந்த பணி
எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. தமிழக நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த பணியை தன் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை அலுவலகத்திலும் சோதனை
எஸ்.பி.கே. நிறுவனத்தால் சிறிய ஒப்பந்ததாரர்கள் நெடுஞ்சாலை பணியை பெறமுடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

30 வங்கிக்கணக்குகள் ஆய்வு
செய்யாதுரைக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணாநகர், போயஸ்கார்டன் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு நடைபெறுகிறது. எஸ்பிகே நிறுவனத்தின் 30 வங்கிக்கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரூ.120 கோடி பறிமுதல்
இந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத 120 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்யாதுரைக்கு சொந்தமான கல்குவாரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

100 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 100 கிலோ தங்கம் மூட்டை மூடடையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் 81 கிலோவும் தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆபரேஷன் பார்க்கிங்
ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணத்துடன் வலம் வரும் கார்கள்
வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரெய்டுக்கு பயந்து பல கோடி ரூபாய் பணத்துடன் கார்கள் சென்னை நகரில் வலம் வருவதாக கூறப்படுகிறது. பணத்துடன் சுற்றும் கார்களை பிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

கிறிஸ்டியை தொடர்ந்து
சத்துணவு முட்டை ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவன குமாரசாமியை தொடர்ந்து அரசு ஒப்பந்த பணி மேற்கொண்டுள்ள மற்றொரு ஒப்பந்ததாரர் அலுவலகத்திலும் ஐ.டி. சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications