ஜல்லிக்கட்டு நடைபெறும் என பாஜகவினர் கூறுவது பொய்யானது - மதுரையில் ராமதாஸ் பேட்டி
ஜல்லிக்கட்டு நடைபெறும் என பாஜகவினர் கூறுவது பொய்யானது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பா.ஜ.க.,வினர் கூறிவருவது பொய்யானது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிவகாசி பாரதி இலக்கிய சங்கம் சார்பில் பெண்கள் சமூக நீதி கருத்தரங்கம் மதுரை இந்திய மருத்துவக் கழக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியது: பெண் விடுதலை, சம உரிமைக்காக 35 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனாலும் இன்னும் அந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஆண்கள் தலைகுனிய வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். எனவே, போராட தயாராக இருங்கள். பாமக உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றார்.
பாமக மாநில தலைவர் கோ.க.மணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, பாமக துணை தலைவர் ம.திலகபாமா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு அழகிய நாயகி அம்மாள், பொன்னம்மாள், ஆவுடையக்காள், மூவலூர் ராமாமிர்தம், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, குயிலி விருதுகள் வழங்கப்பட்டன. பெண் பாதுகாப்பு குறித்த கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். ஆனால் இது பொய்யானது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை. எனவே இந்தாண்டு ஜல்லிக் கட்டு நடைபெறும் என்பது கேள்விக்குறி தான். வங்கிகளில் நிலவும் பணப்பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications