நம்பிக்கையோடு இருந்தோம்.. இன்னும் ஜல்லிக்கட்டுக்கு சாதகமான பதில் வரவில்லை.. ஓபிஎஸ் !
ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினேன். அதனை தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் மூலம் நமக்கு வரவேண்டிய தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் தருமாறு வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார் என்றார். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications