ஜல்லிக்கட்டுக்காக ரயில் ஏறி போராட்டம் நடத்திய போது மின்சாரம் தாக்கி காயமடைந்த லோகேஷ் மரணம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரயில் மீது நின்றதால் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சேலம்: சேலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய போது மின்சாரம் தாக்கி காயமடைந்த இளைஞர் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் இளைஞர்கள் கலந்து கொண்ட புரட்சி போரட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சேலத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது சேலத்தை அடுத்த வீராணம் சத்யா நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகனான தொழிலாளி லோகேஷ் (வயது 17) என்பவர் அந்த ரயிலின் கூரை மீது ஏறி கையை உயர்த்தி ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.
அப்போது எதிர்பாரதவிதமாக லோகேஷ் மீது உயர்மின் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடல் முழுவதும் வெந்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞரை மீட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் லோகேஷ் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லோகேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் லாரன்ஸ், அவரின் சகோதரி தனலட்சுமியின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications