ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு- அவனியாபுரம் நோக்கி 1000 பேர் பயணம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று இளைஞர்கள் எச்சரித்துள்ளதால் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி14ம் தேதி அவனியாபுரம், ஜனவரி15ம் பாலமேடு, ஜனவரி16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர் மாடு பிடி வீரர்கள். ஆனால் தீர்ப்பு உடனடியாக வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறவே, தமிழக மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அலங்காநல்லூரில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால். பதற்றம் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலை தடுப்பு வைத்து மறைத்த போலீசார், மைதானத்தைச் சுற்றி குவிந்துள்ளனர்.
இதேபோல அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூருக்கு சென்று ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என சென்னை மெரினாவில் மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் ஆக்ரோசத்துடன் கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவனியாபுரம் செல்லவுள்ளதாக கூறியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் அனுமதி கேட்டோம் அவர்கள் தரவில்லை. ஆனால் நாங்கள் தடையை மீறி நாளை ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று அவனியாபுரம் பகுதி மக்கள் கூறி வருகின்றனர். வாடிவாசலை தாண்டி சீறிப்பாயுமா? காளைகள்.