ஜல்லிக்கட்டு.. தமிழகம் முழுவதும் முழு அடைப்பு.. எவை எவை இயங்காது?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் அடைந்துள்ள நிலையில் ஜனவரி 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டமாக மாறியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் ஜனவரி 20ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லாரிகள் மற்றும் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தையடுத்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமையன்று 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை பகல் மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடி வருகின்றனர். போராட்டம் முழுவதும் தீவிரமடைந்ததையடுத்து மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிசுபிசுத்த பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி உடனான முதல்வரின் சந்திப்பும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் பல்வேறு தரப்பினரின் ஆதரவு போராட்டம் காரணமாக முழுஅடைப்பு போராட்டமாக மாறியுள்ளது.

தொழிற்சங்கங்கள் ஆதரவு
தொ.மு.ச, சிஐடியு, ஏஐடியுசி, பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்டவை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 1.43 லட்சம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வேலைநிறுத்தம் செய்ய உள்ளதால் தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆட்டோக்கள் ஒடாது
சென்னையில் உள்ள 75,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார ஊழியர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்

முழுஅடைப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஹோட்டல் உரிமையாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே லட்சக்கணக்கான கடைகள் மூடப்பட்டிருக்கும். மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் முழு அடைப்பு போராட்டமாக மாறியுள்ளது.

மருந்து கடைகள் அடைப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மருந்து கடைகள் அனைத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்படும் என்று மருந்து கடை வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகள் இயங்காது
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தென் ஆற்காடு பெட்ரோல் பங்க் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முட்டை விநியோகம் நிறுத்தம்
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை ஒருநாள் முட்டைகளை கடைக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தப் போவதாக நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பட்டாசு, பின்னலாடை , விசைத்தறிகள் ஸ்டிரைக்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதேபோல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈரோடு விசைத்தறியாளர்கள், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மீனவர்கள் ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதே போல தஞ்சாவூர் மாவட்ட மீனவர்களும் வெள்ளிக்கிழமை கடலுக்குள் செல்லப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications