அமைச்சர் ரமணா வைத்த ராட்சச ஜெயலலிதா பேனர் பஸ் மீது விழுந்து விபத்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வாழ்த்தி அமைச்சர் பி.வி.ரமணா வைத்த ராட்சத பேனர் அரசுப் பேருந்து மீது விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை அண்ணா சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையை இன்று ரணகளப்படுத்தி விட்டனர் அதிமுகவினர். ஒரு சாலையையும் விடாமல் அவர்கள் பேனர்களையும், தட்டிகளையும் வைத்து மக்களை நிலை குலைய வைத்து விட்டனர்.

அண்ணா சாலையில் எங்கு பார்த்தாலும் பேனர்கள்தான். அதேபோல ராதாகிருஷ்ணன் சாலை, கடற்கரைச் சாலை என ஒரு சாலையையும் அதிமுகவினர் விட்டு வைக்கவில்லை. வாகனங்கள் சரியாக தெரியாத வகையில் ரோட்டை மறைத்து வைக்கப்பட்ட சாலைகளால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை இன்று அனுபவித்து விட்டனர்.

சட்ட விதிகளுக்குப் புறம்பாக இன்று அத்தனை பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அமைச்சர் பி.வி. ரமணா வைத்திருந்த மிகப் பெரிய ராட்சத பேனரால் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது.

அண்ணா சாலையில் எல்ஐசிக்கு அருகே 60 அடி உயரத்திற்கு ராட்சத பேனரை அமைச்சர் பி.வி.ரமணா வைத்திருந்தார். இந்த பேனர் பாரம் தாங்காமல் அப்படியே சாலையில் சரிந்து விழுந்தது. அது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.

போலீஸார் ராட்சத கிரேனை கொண்டு வந்து விழுந்து கிடந்த பேனரை அகற்றினர். இதனால் அந்தப் பகுதியில் ஏற்கனவே நிலவிய போக்குவரத்து நெரிசலோடு மேலும் நெரிசலாகி மக்களுக்கு கூடுதல் அவதி ஏற்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications