தடுக்கி விழுந்தால் சுடுகாடு.. அந்த இடத்தில் 'அம்மா' பிரசாரமா...??
காரைக்குடி: காரைக்குடியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ள இடம் சுடுகாடு அருகே அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா காரைக்குடியில் மார்ச் 21 ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடை வடக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், அதிமுக தேர்தல் பிரிவு நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சார மேடையை வடக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைக்க கடும் முயற்சி எடுத்து வந்தனர்.

அப்போது, காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஆவின் பால் பண்ணை பின்புறம் உள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள சங்கு சமுத்திர கண்மாய்ப்பகுதியைத் தேர்வு செய்தனர்.
இங்கு பொதுக் கூட்ட மேடை, ஹெலிபேட் அமைப்பதற்காக கண்மாய்ப் பகுதி முழுவதும் இயந்திரங்களைக் கொண்டு சமப்படுத்தி உள்ளனர். மேலும் கூட்டத்தற்கு வருவோரின் வசதிக்காக கண்மாய்க் கரையை உடைத்து வழி ஏற்படுத்தி உள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
மேலும், நான்கு வழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் உள்ளே வருவதற்கு என மூன்று இடங்களில் வழி அமைத்துள்ளனர். இதற்காக சங்கராபுரம் ஊராட்சி மக்களுக்கு உள்ள பொது சுடுகாட்டு வேலியை முற்றிலும் உடைத்து விட்டனர். பல கல்லறைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் புகார் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தை உடனே தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும், அடுத்து நீதி மன்றத்தின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லவுள்ளதாம் திமுக.
அதேசமயம், சுடுகாடு அருகே தேர்தல் பிரச்சார மேடை அமைந்துள்ளதாக வெளியான தகவலால், அதிமுக முன்னணி நிர்வாகிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications