அம்மா மெடிக்கல்ஸ்.. 10 இடங்களில் திறந்து வைத்தார் ஜெயலலிதா
சென்னை: தமிழக அரசின் கூட்டுறவுத்துரை மூலம் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகங்கள் எனப்படும் மருந்துக் கடைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிமுகப்படுத்தி 10 கடைகளைத் திறந்து வைத்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

இதேபோல மேலும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்; ஈரோடு, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; மதுரை மாவட்டம் - பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கே.கே. நகரில் அமைந்துள்ள மதுரா கோட்ஸ் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை;

சேலம் மாவட்டம் - செர்ரி ரோட்டில் அமைந்துள்ள சேலம் என்.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தாரமங்கலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; சிவகங்கை மாவட்டம் - காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; விருதுநகர் மாவட்டம் - சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைந்துள்ள 9 அம்மா மருந்தகங்களையும் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

இந்த மருந்தகங்கள், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளை சிறப்பாக பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு வெளிக்கொணர்வு முறை (அவுட்சோர்சிங்) மூலம் மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை முதல்வர் பெயரில் இயங்கி வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications