அதிமுக ஆட்சியில் மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் - ஜெ., உறுதி
திருநெல்வேலி: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேவைப்பட்டால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் இன்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் அதிமுகவின் தேர்தல் அறிக்கை. செயல்படுத்துவதற்கு சாத்தியமானவை குறித்து சிந்தித்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த தேர்தல் அறிக்கையை கருணாநிதி தொடர்ந்து குறை கூறி வருகிறார். பொருளாதாரத்தில் நாங்கள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளியோரை கைதூக்கி விடும் திட்டங்கள் தான். இவை நடுத்தர பிரிவு மக்களை பாதுகாக்கும் திட்டங்கள் தான். இதில் மக்களை ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?
ஆனால், திமுக தலைவர் கருணாநிதியும், அவரது தனயனும் மக்களை ஏமாற்றுவதற்காக இலவசங்களை நாங்கள் அறிவித்துள்ளோம் என பொய்ப் பிரசாரம் செய்து வருவதாகவும் ஜெயலலிதா கூறினார்.
சூப்பர் ஹீரோ தேர்தல் அறிக்கை
தங்களது தேர்தல் அறிக்கையை திமுக-வினர் தான் சூப்பர் ஹீரோ என்றும், கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை என்றும் கூறி வந்தனர். ஏமாற்று அறிக்கைகளை வெளியிடுபவர்கள் தான் இவ்வாறெல்லாம் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி கூறிக் கொள்வார்கள்.
ஏழைகளுக்கான தேர்தல் அறிக்கை
எங்களது தேர்தல் அறிக்கை சாமானிய மக்களுக்கான தேர்தல் அறிக்கை. வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை. எனவே தான், இந்தத் தேர்தல் அறிக்கைக்கு எந்த அடைமொழியும் தேவையில்லை என்றார் ஜெயலலிதா.
மருத்துவ நுழைவுத் தேர்வு
கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போதுதான் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2010 ஆம் ஆண்டில் அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் மருத்துவ நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்து.
கருணாநிதி ஆட்சி
அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமரைச் சந்தித்து நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெற்றிருக்க வேண்டும்.
கருணாநிதி 2ஜி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை மட்டுமே பெறப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மனு
2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா அரசையும் வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டது.
தனிச்சட்டம் இயற்றுவோம்
உச்ச நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும், நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேவைப்பட்டால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
கருணாநிதிக்கு பதிலடி
மருத்துவ நுழைவுத் தேர்வை திமுக ஆட்சியில் ரத்து செய்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில் நெல்லையில் இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தேவைப்பட்டால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.