போடிநாயக்கனூர் முதல் ஸ்ரீரங்கம் வரை.. ஜெ. கண்ட தேர்தல் களங்கள்..
சென்னை: தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட தீர்மானித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வெளிமாவட்டங்களில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா முதல் முறையாக தலைநகர் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரை தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியம்தான்..
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற ஜெயலலிதா ஒருவார காலம் அமைதி காத்திருந்தார். தற்போது அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக பணிகள் மெல்ல மெல்ல சூடு பிடித்துள்ளன.
முதல் கட்டமாக மே 22-ந் தேதியன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேலை ராஜினாமா செய்ய வைத்தார். அவரது ராஜினாமாவை சட்டசபை சபாநாயகர் உடனே ஏற்றுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. 1989ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னையைத் தவிர்த்து வெளிமாவட்டங்களில்தான் ஜெயலலிதா போட்டியிட்டு வந்தார். இம்முறைதான் சென்னையில் உள்ள தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
போடிநாயக்கனூர்
1989 ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது தென் தமிழகத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.
அத்தொகுதியில் ஜெயலலிதா 57,603 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் முத்து மனோகரன் 28,872 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
பர்கூர், காங்கேயம்
1991ஆம் ஆண்டு எல்லை பகுதியான பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ஜெயலலிதா வென்றார்.
பர்கூரில் ஜெயலலிதா 67,680 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தர் 30,465 வாக்குகளையும் பெற்றார். காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா 69,050 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ராஜ்குமார் மன்றாடியார் 35,759 வாக்குகளையும் பெற்றிருந்தார். பின்னர் காங்கேயம் தொகுதியை ஜெயலலிதா ராஜினாமா செய்தார்.
பர்கூரில் தோல்வி
1996ஆம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தி.மு.க.வின் சுகவனம் 59,418 வாக்குகளையும் ஜெயலலிதா 50,782 வாக்குகளையும் பெற்றார்.
4 தொகுதிகளில் போட்டி- தள்ளுபடி
2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் டான்சி முறைகேடு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாலும் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் முதல்வராக பதவியேற்று சில மாதங்களில் அப்பதவியை ராஜினாமா செய்து 2002ஆம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டார் ஜெயலலிதா.
ஆண்டிபட்டி
2002ஆம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில் ஜெயலலிதா 78.437 வாக்குகளையும், தி.மு.க.வின் வைகை சேகர் 37,236 வாக்குகளையும் பெற்றார்.
மீண்டும் ஆண்டிபட்டி 'அரசி'
2006ஆம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். இத்தேர்தலில் ஜெயலலிதா 73,927 வாக்குகளையும் தி.மு.க.வின் சீமான் 48,741 வாக்குகளையும் பெற்றார்.
ஸ்ரீரங்கம்
2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மத்திய பகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார். அங்கு போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ஆனந்த் 63,480 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார்.
இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிட்டது. தற்போது ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
முதல் முறையாக..
இம்முறை சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.. சென்னையில் ஜெயலலிதா தற்போதுதான் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் சிறிய தொகுதியாக இருக்கும் ஆர்.கே.நகரில் ஜெயலலிதா எளிதாக வெல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.