மின் வழித்தட பிரச்சனை: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: தமிழக அரசு தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறும் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வாங்க தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தங்கள் செய்துள்ளது.

நிலுவையில் ஒப்பந்தம்
இதையடுத்து இந்த தனியார் மின் உற்பத்தியாளர்கள் தமிழகத்துக்கு மின்சாரத்தை கொடுக்க மின் தடத்தை நீண்ட கால அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பம் இன்னமும் நிலுவையிலேயே உள்ளது.

சோலாப்பூர்- ரெய்ச்சூர் தடம்
மேலும், மேற்கு மண்டலத்தில் இருந்து தென் மண்டலத்துக்கு மின்சாரம் கொண்டு வர சோலாப்பூர் - ரெய்ச்சூர் வரையிலான மண்டலங்களுக்கு இடையிலான 4 ஆயிரம் மெகாவாட் சக்தி கொண்ட மின் தடம் உள்ளது. ஆனாலும், மின் மாற்று சக்தியான 1100 மெகாவாட்டில் மத்திய மின் தொகுப்புக் கழகம் 350 மெகாவாட் மின்சாரத்தையே அனுமதிக்கிறது.

ஒரே மின்வழித் தடத்தில்..
இதில், டெல்லி அரசு திரும்ப ஒப்படைத்த 377 மெகாவாட் மின்சாரம் மத்திய மின் அமைச்சகத்திடம் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. இந்த மின்சாரமும் 2015 மார்ச் மாதம் வரை மேற்கூறிய மின் வழித் தடத்தில் வழங்கப்படுகிறது.

தமிழகத்துக்கு பாதிப்பு
இதன் காரணமாக, தமிழகத்துக்கு அந்த மின் வழித் தடத்தில் உரிய மின்சாரம் பெறுவதில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மத்திய மின் அமைச்சகத்தின் இந்த தாற்காலிக மின் ஒதுக்கீடு, தமிழகத்தின் நீண்ட கால ஒப்பந்தத்துக்கு இணையாக கருதப்பட்டுள்ளது. எனவே, மத்திய மின் அமைச்சகத்தின் தாற்காலிக மின் ஒதுக்கீடு நடவடிக்கை, தமிழகத்தின் நியாயமான அதே சமயம் நீண்ட கால மின் ஒப்பந்தங்களின் உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது.

பிரதமர் தலையிட வேண்டும்
இதனால், தற்போதுள்ள உயர் சக்தி மின் வழித் தடம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, தாற்காலிக மின் ஒதுக்கீட்டை கணக்கில் கொள்ளாமல், தமிழகத்தின் நீண்ட கால மின் ஒப்பந்தங்களை பரிசீலித்து, தமிழகத்துக்கு மின்சார தொகுப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய மின் அமைச்சகத்தையும், மின் தொகுப்புக் கழகத்தையும் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications