ஜெ., உண்மை விசுவாசி காவலர் வேல்முருகன் டிஸ்மிஸ்... உண்ணாவிரதம் இருந்தபோது கைது
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கோரி கூடலூர் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்த காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி காவலர் வேல்முருகன். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி கருத்து கூறினார். பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் வேல்முருகன். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி. இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2014 இல் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, சீருடையிலேயே அமர்ந்து மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா இறந்தபிறகு, வேல்முருகன் மன உளைச்சலால், தன்னால் வேலை செய்ய முடியவில்லை எனக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டப்போவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவருக்கு எஸ்.பி. அறிவுரை கூறியதை அடுத்து, தொடர்ந்து காவல் பணியை மேற்கொண்டார்.
சசிகலா பற்றி சர்ச்சை
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தேனி நேரு சிலை அருகே சசிகலாவுக்கு எதிராக வேல்முருகன் பேசியதால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் தேனி ஆயுதப்படைப் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பணி நீக்க உத்தரவு
இதைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்கள் கேட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை வேல்முருகன் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு, குச்சனூரிலுள்ள அவரது வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டது.
உண்ணாவிரதம்
இதனையடுத்து கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் போலீஸ் உடையில் தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இது குறித்து தகவலறிந்த போலீசார் பென்னிகுயிக் மணிமண்டபம் சென்று போராட்டம் நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர்.
போலீஸ் கைது
ஆனால், அதையும் மீறி வேல்முருகன் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக போலீசார் அவரை கைது செய்தனர். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் வேல்முருகனிடம் எழுதி வாங்கிகொண்டு இனிமேல் இது போல் செயல்படமாட்டேன் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து விடுவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உண்மை விசுவாசிக்கே இந்த நிலையா?
ஜெயலலிதா இறந்த போது எனது தாய் இறந்து விட்டார் என்று அழுதார் வேல்முருகன். காவலர் பணியை கூட ராஜினாமா செய்தார். இப்போது ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சைக்கு உரிய கருத்து கூறியதாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.