சென்னை மாநகராட்சி இனி "பெருநகர சென்னை மாநகராட்சி" அறிவித்தார் ஜெ.
சென்னை: சென்னை மாநகராட்சியை பெருநகர சென்னை மாநகராட்சியாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 42 உள்ளாட்சிகளும் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் அறிவித்தார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி என அறிவித்து காணொலிக் காட்சி மூலமாகத் தொடக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியானது 10 மண்டலங்கள், 155 வார்டுகளுடன் 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வந்தது. பின்னர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் பரப்பளவினை 174 சதுர கிலோ மீட்டரிலிருந்து 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி எனப் பெயர் மாற்றம் செய்து 26.10.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி என்ற முறைப்படியான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக இன்று துவக்கி வைத்தார். மேலும் மொத்தம் 36 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகங்கள், உயர்மட்ட பாலம், பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையம், அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகரை விரிவுபடுத்தி, "கிரேட்டர் சென்னை' திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, சென்னை மாநகரின் 174 கி.மீ., பரப்பு, 426 கி.மீ., பரப்பாக அதிகரிக்கப்பட்டது.இதற்காக, சென்னையை சுற்றியுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் என 42 உள்ளாட்சி அமைப்புகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகள் 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் எற்பட்டதை அடுத்து, இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என்று எண்ணப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியை ஆட்சி முடியப்போகும் நேரத்தில் அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் துவக்கி வைத்த சில மணி நேரங்களிலேயே மாநகராட்சி இணைய தளத்திலும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது