ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மையா? லலிதா சொல்வதில் நிறைய குளறுபடி இருக்கே கவனிச்சீங்களா
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள், நான்தான், என்று பெங்களூரை சேர்ந்த பெண், அம்ருதா உச்சநீதிமன்றம் போனாலும் போனார், இந்த விவகாரம் பல்வேறு திருப்பங்களோடு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஹைகோர்ட்டில் வேண்டுமானால் முறையீடு செய்யுங்கள் என கூறியுள்ளது.
அம்ருதாவின் கோரிக்கைகளை முதலில் கேலியுடன் கடந்து சென்றனர் மக்கள். சொத்துக்காக ஆசைப்பட்டு இவ்வாறு வழக்குகள் போடப்படுவதாக கூறியோரே அதிகம்.
பெண் குழந்தை
ஆனால் இதற்கு நடுவே, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறிவரும் கருத்துக்கள்தான் பெரும் புயலை கிளப்பியுள்ளன. இதுவரை இல்லாமல் முதல் முறையாக, ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று லலிதா டிவி சேனல்களுக்கு பகிரங்க பேட்டியளித்து வருகிறார்.
தந்தை சோபன் பாபு
1980ல் சென்னையில் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், பேறு காலம் பார்த்தது தனது பெரியம்மா என்றும், குழந்தையின் தந்தை மறைந்த நடிகர் சோபன் பாபு எனவும், லலிதா கூறிய கருத்துக்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அந்த விவகாரம் குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று, ஜெயலலிதா தனது உறவினர்களிடம் சத்தியம் வாங்கியிருந்ததாக லலிதா கூறியுள்ளார்.
சந்தேகங்கள்
லலிதாவின் கருத்துகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. முதலாவதாக, லலிதா ஏன் இத்தனை வருடம் கழித்து, அதுவும் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த கருத்தை கூறினார் என்பது. அவர் இதை கூறாமலே கூட இருந்திருக்கலாமே. சத்தியம் வாங்கிவிட்டதால் இத்தனை நாட்கள் ரகசியம் காத்ததாக கூறும் லலிதா, இப்போது மட்டும் ஏன் சத்தியத்தை மீறுகிறார்?
அம்ருதாவை தெரியாதாம்
ஒருவேளை அம்ருதாதான் ஜெயலலிதாவின் குழந்தை என்பது லலிதாவுக்கு உறுதியாக தெரிந்திருந்து, அம்ருதாவின் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு, சத்திய கட்டுகளை உடைத்து, உண்மையை கூறியிருப்பாரோ? என்றால் அதுவும் இல்லை. ஏனெனில், லலிதாவே கூறுகிறார், அம்ருதாதான் ஜெயலலிதா மகளா என்பது எனக்கு தெரியாது என்று.
வாய்ப்பு இருக்குமாம்
வெறும், 3 மாதங்களாகதான் அம்ருதாவை லலிதாவுக்கு தெரியுமாம். இதையும் அவரே கூறுகிறார். ஆனால் ஜெயலலிதாவின் சகோதரி முறையான சைலஜாதான் அம்ருதாவை வளர்த்து வந்ததாகவும், எனவே அவர் ஜெயலலிதா மகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார். யூகத்தின் அடிப்படையிலான ஒரு உறவுக்கு முக்கியத்துவம் தந்து ஏன் லலிதா, சத்தியத்தை மீறினார்?
குழந்தை பெற்றுக்கொள்ள அவசியம் என்ன?
பெற்ற மகளை பார்க்காமல், பாசம் கொடுக்காமல் ஜெயலலிதா ஒதுங்கியதற்கு, ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று எடுத்துக்கொண்டாலும், ஜெயலலிதா குழந்தை பெற்றுக்கொண்டுதான், அதை மறைத்து வளர்க்க வேண்டும் என்று என்ன நிர்பந்தம் உள்ளது? குழந்தை இருப்பதாக காட்டிக்கொள்வது தனது வருங்கால நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்று நினைத்திருந்தால், 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்க தேவையே இல்லையே.
மறைக்க முடியாது
ஜெயலலிதா சினிமா உலகில் இருந்து வந்த பிரபலம். அவர், 10 மாதம் வயிற்றை மறைத்து குழந்தையை ரகசியாக பெற்று, அதை ரகசியமாக வளர்ப்பது என்பது சக நடிகர், நடிகைகள், மீடியாக்களுக்கு தெரியாமல் இருந்தது என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல அல்லவா உள்ளது.