தேவருக்கு தங்க கவசம் கொடுத்த "தங்கத் தாரகை" இல்லையே.. வருத்தத்தில் முக்குலத்தோர்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம் கொடுத்த ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லாதது முக்குலத்தோர் மக்களுக்கு வேதனை அளித்துள்ளது.
பசும்பொன், ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்ட நிலையில் தங்களது சமுதாயத்திற்கு பெரும் கெளரவம் தேடித் தந்தவரான ஜெயலலிதா உயிரோடு இல்லையே என்று முக்குலத்தோர் சமூகத்தினர் வேதனையில் உள்ளனர்.
முக்குலத்தோர் மக்களால் கடவுளாக கருதப்படுவர் முத்துராமலிங்க தேவர் ஆவார். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் நினைவிடம் உள்ளது. இவரது பிறந்த நாளும், நினைவு நாளும் அக்டோபர் 30 என்பதால் தேவர் ஜெயந்தியும், குரு பூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரப் போராட்டத் தியாகியான இவர் தனது சொத்துகள் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே அளித்தார். அப்படிப்பட்ட தியாகியான தேவரை இன்று வரை அப்பகுதி மக்கள் சாமியாக பாவித்து வருகின்றனர்.
14 கிலோ கவசம்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014-ஆம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு சாத்தினார். இதன் மூலம் முக்குலத்தோரின் மனதில் ஜெயலலிதா நீங்கா இடம் பிடித்தார். அதன் பின்னர் அந்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குரு பூஜை விழாக்களில் அமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
தேவருக்கான கவசம்
இந்த தங்க கவசம் ஆண்டுதோறும் தேவர் குரு பூஜையின் போது வங்கியிலிருந்து எடுத்து தேவருக்கு சார்த்தப்பட்டு பிறகு வங்கி பெட்டகத்திலேயே வைக்கப்படும். ஆண்டுதோறும் அதிமுக பொருளாளரும், தேவர் நினைவிட நிர்வாகியும் சேர்ந்து இந்த கவசத்தை எடுப்பது வழக்கம்.
மருத்துவமனையில் ஜெயலலிதா
கடந்த ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நடைபெற்ற குருபூஜையின் போதும் ஓபிஎஸ் கலந்து கொண்டார். கடந்த ஆண்டுகளில் தேவர் குரு பூஜையின் போது ஜெயலலிதா கலந்து கொள்ளாவிட்டாலும் அவர் தலைமையில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை விழாவின் போது ஜெயலலிதா உயிரோடு இல்லையே என முக்குலத்தோர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
டிடிவி தினகரன் அணியினர் தகராறு
ஜெயலலிதா இல்லாததோடு தங்க கவசத்தை யார் எடுப்பது என்பதிலும் பிரச்சினை, மோதல் ஏற்பட்டது அம்மக்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக இரண்டாக பிளந்துவிட்டதால் கட்சியின் பொருளாளர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வமா இல்லை எடப்பாடியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனா , இல்லை தினகரனால் நியமிக்கப்பட்ட ரங்கசாமியா என்ற குழப்பம் நிலவியது. பின்னர் ஒரு வழியாக துணை முதல்வரும், தேவர் நினைவிட நிர்வாகியும் கவசத்தை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது தேவரின் தங்க கவசத்தை எடுக்க டிடிவி தினகரன் தரப்பினரும் வந்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜெ.இல்லாததால்....
ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற கோஷ்டி பூசல் நடந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். அவர் இல்லாமல் தேவர் ஜெயந்தியும் தேவர் குருபூஜையும் கொண்டாடப்பட்டது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் நம் தேவருக்கு தங்க கவசம் அளித்த தங்கத் தாரகை இல்லையே என்ற எண்ணம் அவர்கள் மனதில் மேலோங்கி இருந்தது.