அதிமுக ஆதரவு: பின்னர் தெரிவிப்பதாக தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு.. 5 சீட் கேட்கும் தமிழ் மாநில மு.லீக்.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்தியக் குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைச் சந்தித்தபின், இக்கட்சிகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.
அதேசமயம், இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி உடனடியாக தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை.இதனால் அக்கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே தொகுதிப் பங்கீ்ட்டில் சிக்கலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய சூழலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியும், மக்கள் நலக்கூட்டணியும் உறுதியாகியுள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பாஜகவும் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அதிமுகவும் இன்று தனது கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.பி.வி.கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் இன்று போயஸ் தோட்டம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை ஒருவர் பின் ஒருவராக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது தொகுதிப்பங்கீடு குறித்து கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

இந்தியக் குடியரசுக் கட்சி...
அப்போது, இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரன் கூறுகையில், ‘சட்டசபைத் தேர்தலில் தங்களது கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தொகுதி பங்கீடு குறித்து பிறகு தெரிவிக்கப்படும்' என்றார். நீண்ட காலமாக அதிமுக கூட்டணியில் இருக்கும் பழைய கட்சி இந்தியக் குடியரசுக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வர்டு பிளாக்...
அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.பி.வி.கதிரவனும் தங்களது கட்சி சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்தார். கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.

முஸ்லிம் லீக்...
தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத்தும் இந்த சந்திப்பிற்குப் பின் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகளை ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தங்களது கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளதாகவும் ஷேக் தாவூத் தெரிவித்துள்ளார்.

வாழ்வுரிமைக் கட்சியும் ஆதரவு...
இதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெயலலிதாவை சந்தித்த பின் வேல்முருகன் பேட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், வலுவாக உள்ள தென், வட தமிழகத்தில் போட்டியிட இடங்கள் கேட்டுள்ளோம். மூத்த அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசித்து முடிவு கூறுவதாக ஜெயலலிதா தகவல் தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்ட தொகுதிகள், இரட்டை இலக்க இடங்கள் கிடைக்கும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.

சந்தேகம்...
இந்த நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர் கூறுகையில், ‘அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து செயற்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்' என்றார். இதன்மூலம் தொகுதிப் பங்கீடு விசயத்தில் அதிமுகவுடன் இக்கட்சிக்கு உடன்பாடு ஏற்படவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆதரவு...
ஏற்கனவே, அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டுவிட்ட நிலையில், கூட்டணித் தலைவர்களுக்கு தங்களுக்கு விரும்பிய தொகுதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேச்சுவர்த்தையின் போதும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டதாகத் தெரிகிறது. தவ்ஹீத் ஜமாத் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வெளிப்படையாக அதிமுகவிற்கு ஆதரவு எனத் தெரிவித்துள்ளன. விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து இக்கட்சித் தலைவர்கள் மீண்டும் ஜெயலலிதாவை சந்திப்பார்கள் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன












Click it and Unblock the Notifications