சசி குடும்பத்தால் கடைசி வரை ஜெ.வைக் காண முடியாமல் கட்டம் கட்டி விரட்டப்பட்ட அண்ணன் மகள் தீபா
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அருகே ரத்த சொந்தங்கள் யாரும் நிற்கவில்லை. ஒரே ரத்த சொந்தமான அண்ணன் மகள் தீபாவையும் அருகிலேயே விடாமல் கட்டம் கட்டி விரட்டியடித்துள்ளனர்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஞாயிறன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் திங்கட்கிழமை இரவு மரணமடைந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் திரு ஜெயராமனின் மகள் தீபா ஞாயிறன்று இரவு திடீரென அங்கு வந்தார். மருத்துவமனைக்குள் ஆவேசமாக நுழைய முயன்றார். ஆனால் காவல் துறையினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனது அத்தையை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கப்படுகிறது என்று கதறி அழுதார். சசிகலா சொல்லித்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் நான். ஆனால் என்னை உள்ளே விட மறுப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.
திங்கட்கிழமை இரவு ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் நடைபெற்ற இறுதிச்சடங்கிலும் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கடைசி வரை போயஸ்தோட்டத்திற்கு தீபாவை நுழைய விடவில்லை. ஜெயலலிதாவின் உடல் போயஸ் தோட்டத்தில் இறுதி சடங்கு நடத்தப்பட்டு, பின்னர் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் முகத்தை கடைசி வரை அவரது அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான பல ஆயிரக்கணக்கான சொத்துக்கள் இனி யாருக்கு சொந்தமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் இன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.