ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்டளையிடும்- ஓபிஎஸ் நம்பிக்கை
அதிமுக தலைமைக்கு நான் விசுவாசமானவன், அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா கட்டளையிடும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் இடையே அனல் பறக்கும் போர் நடைபெற்று வருகிறது. மாறி மாறி இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் தமிழக அரசியல் களம் தகிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 131 எம்எல்ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக கலந்து கொண்டனர்.
இது பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக்கொண்டுள்ளனர் என்றார்.
ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவின் எம்எல்ஏவிற்கு கட்டளையிடும் என்றும் கூறினார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, நீங்களாவது விசுவாசமாக இருங்கள் பன்னீர் செல்வம் என்று கூறியிருக்கிறார். நான் அதிமுகவிற்கு விசுவாசமாகவே இருப்பேன். இது மக்களுக்கு தெரியும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
ஜெயலலிதாவின் கொள்கைளுக்கு பங்கம் வராமல் நான் ஆட்சி நடத்தினேன். முதல்வராக நான் இருந்த போது அமைச்சர்கள் புதிய முதல்வர் பற்றி பேசி குழப்பத்தை ஏற்படுத்தினர்.
அப்பல்லோ மருத்துவர்கள் குழு பத்திரிகையாளர்கள் சந்திப்பு எனக்கு தெரியும். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கத்தில் திருப்தி இல்லை என்பதால் விசாரணை கமிஷன் அமைக்கப் போவதாக கூறினேன்.
அதிமுகவில் என்னால் பிளவு ஏற்படாது. திமுகவோ, பாஜகவோ எனக்கு பின்புலமாக இல்லை. அதற்கான அவசியமும் இல்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.