ஊழலின் நிழல் படாமல் உரிய நிர்வாகம் நடக்க இனியாவது ஜெ. வழிகாட்ட வேண்டும்: தமிழருவி மணியன்
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், ஊழலின் நிழல் படாமல் உயரிய நிர்வாகத்தை நடத்தவும், தமிழக அரசுக்கு ஜெயலலிதா இனியாவது வழிகாட்ட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்ச நீதிமன்றம் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதுடன் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையையும் நிறுத்தி வைத்திருப்பது அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளிப் பரிசாக அமைந்துவிட்டது. ஆளும் கட்சித் தலைமையின் வழிகாட்டுதலுடன் ஆட்சி நிர்வாகம் நடப்பது ஜனநாயக வரையறைக்குட்பட்ட நெறிமுறை தான்.

நாடு சுதந்திரம் பெற்ற சூழலில் ஆட்சித் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேரு, ஆளும் காங்கிரஸின் தலைவராக ஆச்சாரிய கிருபளானியின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவில்லையென்று அண்ணல் காந்தியிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு, தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது கடந்த காலச் சரித்திரம்.
நேரு போன்ற மிகப்பெரிய ஆளுமைக்குக் கிருபளானியின் ஆலோசனை அவசியப்படாமற் போயிருக்கலாம். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஜெயலலிதாவின் பரிந்துரைகளும், வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானவை.
தடுமாறிய முதல்வர்
ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளை அறிய முடியாமல் அரசு நிர்வாகத்தை எந்தத் திசையில் நடத்துவது என்று தெரியாமல் தவித்த முதல்வர் பன்னீர்செல்வம் இனி நிம்மதியாக அவருடைய கட்சித் தலைமை காட்டும் கண்ணசைவுக்கு ஏற்ப காரியமாற்றுவார் என்பதில் ஐயமில்லை.
வழிகாட்டுதல் அவசியம்
இந்திரா காந்தியை சஞ்சய் காந்தியும், மன்மோகன் சிங்கை சோனியா காந்தியும், ராப்ரி தேவியை லாலு பிரசாத் யாதவும் பின்னால் இருந்து இயக்கியது போன்று முதல்வர் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா இயக்குவார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் தான்.
உயிரோட்டமுள்ள அரசு
கட்சியும் ஆட்சியும் திசை தெரியாமல் முடங்கிக் கிடப்பதைவிட ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் உயிரோட்டத்துடன் இயங்குவது வரவேற்கத்தக்கதுதான்.
நல்ல மாற்றம்
சிறைவாசம் ஜெயலலிதாவிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆட்சி நிர்வாகத்தில் இதுவரை நடந்தேறிய தவறுகள் அனைத்தும் கலையப்பட்டு நல்ல மாற்றங்களுடன் நெறிசார்ந்த பாதையில் பன்னீர்செல்வத்தின் அரசு பயணிப்பதற்கு ஜெயலலிதா பாதை அமைத்தால் நல்லது.
ஊழலற்ற அரசு
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், ஊழலின் நிழல் படாமல் உயரிய நிர்வாகத்தை நடத்தவும், தமிழக அரசுக்கு ஜெயலலிதா இனியாவது வழிகாட்ட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் எதிர்பார்க்கிறது என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications