24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் 13 வேட்பாளர்கள் மாற்றம்.. தடுமாற்றத்தில் அதிமுக?
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் 4 முறை வேட்பாளர் பட்டியலை மாற்றியமைத்துள்ளார் ஜெயலலிதா., இதன் மூலம், 13 வேட்பாளர்கள் பந்தாடப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 இடங்களில் தனித்துப் போட்டி என அறிவித்து நேற்று முன்தினம், தனது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது. மிச்சமுள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் பெயரும் அப்போது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் திடீர், திடீரென அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
முதல் மாற்றம்
நேற்று, இரவு திடீரென அருப்புக் கோட்டையில் முத்துராஜா மாற்றப்பட்டு வைகை செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பகலில் தமிழகத்தில் 7 வேட்பாளர்களும் புதுவையில் 3 வேட்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்தது.
மாற்றங்கள்
சென்னை தி.நகரில் சரஸ்வதி ரங்கசாமி மாற்றப்பட்டு சத்தியநாரயணா நியமிக்கப்பட்டார். மேட்டூரில் சந்திரசேகரன் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் செம்மலையும், மன்னார்குடியில் சுதாவுக்கு பதிலாக காமராஜ் என்பவரும், காட்டுமன்னார்கோவிலில் மணிகண்டன் மாற்றப்பட்டு முருகுமாறன் என்பவரும், பூம்புகார் தொகுதியில் நடராஜன் மாற்றப்பட்டு எஸ்.பவுன்ராஜ் என்பவரும், வேதாரண்யம் தொகுதியில் கிரிதரனுக்கு பதிலாக ஓ.எஸ்.மணியன் என்பவரும் நியமிக்கப்பட்டனர்.
புதுச்சேரியும் தப்பவில்லை
நாகர்கோவிலில் டாரதி சாம்சனை மாற்றிவிட்டு நாஞ்சில் முருகேசன் வேட்பாளராக நியமிக்கப்பட்டனர். புதுச்சேரியில் திருபுவனைக்கு சங்கர், திருநள்ளாறு தொகுதிக்கு முருகையன், காரைக்கால் தெற்கு தொகுதிக்கு அசனா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மாலை 3வது முறையாக வேட்பாளர் மாற்ற அறிவிப்பு வெளியானது. அதில் பல்லாவரம் தொகுதியில் சிவி இளங்கோவன் மாற்றப்பட்டு நடிகையும் அதிமுக பேச்சாளருமான சி.ஆர். சரஸ்வதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அரை மணி நேர இடைவேளைதான்
அத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால் இந்த அறிவிப்பு வெளியான அரை மணி நேரத்திற்குள்ளாக 4வது முறையாக வேட்பாளர் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது, மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எம்.எஸ்.பாண்டியனுக்கு பதிலாக வி.வி.ராஜன் செல்லப்பா நியமிக்கப்பட்டார்.
கிண்டல்
இன்னும் எத்தனை முறை வேட்பாளர் பட்டியல் மாறும் என்பது தெரியவில்லை. வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில், திடமான ஒரு முடிவை எட்ட முடியாமல் அதிமுக தலைமை தடுமாறுவது குறித்து சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.
கிலி
கடந்த 24 மணி நேரங்களுக்குள்ளாக, 13 வேட்பாளர்களை தூக்கியடித்துவிட்டு, புதிதாக 13 வேட்பாளர்களை பட்டியலில் சேர்த்துள்ளது அதிமுக தலைமை. மாற்றம் செய்யப்படுவதற்கான காரணமும் மக்கள் மன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே, வேட்புமனு தாக்கல் முடியும்வரை எதையும் உறுதியாக கூற முடியாதே என்ற கிலியில் அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர்.