முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு .. தீவிர சிகிச்சை - அப்பல்லோ அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தொடர் சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் என மாறுபாடு ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வந்தன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வந்தனர். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தற்போது அவரது இதயத்தையும், சுவாச பிரச்சினையையும் மருத்துவர்கள் உற்று கவனித்து தொடர் சிகிச்சை அளித்து வருவதாக இரவு தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications