ஜெயலலிதாவை விடாது தொடரும் புதன் ஓரை சென்டிமெண்ட்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமையன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. இதில் முதல்வராக வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்கிழமையன்று மாலையே சபாநாயகர் அறையில், எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க உள்ளதாக, தகவல் வெளியானது.
பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தலைமை செயலகத்தில் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் மாலை, திடீரென பதவியேற்பு நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
எம்.எல்.ஏ பதவியேற்பு
ஜூலை 1ம் தேதி புதன்கிழமையன்று புதன் ஓரையில் ஜெயலலிதா பதவியேற்பார் என்று கூறப்பட்டது ஆனாலும் பதவியேற்பு விழா நடைபெறவில்லை. இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றும் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக பதவியேற்க நல்ல நாள் பார்க்க காரணம் இல்லாமல் இல்லை.
கர்நாடகா மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவிக்கு எந்தவித சிக்கலும் வரக்கூடாது என்று யோசிக்கிறாராம் ஜெயலலிதா.
ஆர்.கே.நகரில் வெற்றி
ஸ்ரீரங்கம் தேர்தலில் வெற்றி பெற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற காரணத்தால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவி, முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. தண்டனையில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்த பின்னர் முதல்வராக பதவியேற்று, இடைத்தேர்தலிலும் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் சற்றே மனக்கலக்கத்தில் ஆழ்ந்துள்ளாராம் ஜெயலலிதா.
குரு பெயர்ச்சி
ஜூலை 5ம் தேதி குருப்பெயர்ச்சி வேறு ஜெயலலிதாவின் ராசியான சிம்மத்திற்கு ஜென்ம குருவாக உள்ளது. இது சாதகமற்ற நிலை என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளதால் பல்வேறு பரிகார பூஜைகளையும் செய்து வருகிறாராம் ஜெயலலிதா.
புதன் ஓரையில் பதவியேற்பு
ஜெயலலிதா சனிக்கிழமையன்று 11 மணிமுதல் 12 மணிக்குள் புதன் ஓரையில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்பார் என்றும் போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் சென்டிமெண்ட்
ஜெயலலிதா கடந்த சில மாதங்களாகவே புதன் ஓரை நேரத்தில்தான் சுப காரியங்கள் அனைத்தையும் செய்கிறார். ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டதும், ஆர்.கே.நகருக்கு பிரசாரம் போனதும் புதன் ஓரையில்தான். மெட்ரோ ரயில் தொடக்க விழாவையும் அதே புதன் ஓரை பார்த்துத்தான் தொடங்கி வைத்தார். தற்போது மீண்டும் புதன் ஓரையில் எம்.எல்.ஏவாக பதவியேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.