மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு "அம்மா செல்போன்".. ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு இலவசமாக அம்மா செல்போன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில்தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
செல்போன் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மேசைகளைப் பலம் கொண்ட மட்டும் தட்டி வரவேற்றனர்.
ஜெயலலிதாவின் அறிக்கை:

எனது தலைமையிலான அரசு உருவாக்கியது
மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக்குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.

எனது தலைமையிலான அரசு தொடங்க வைத்தது
மேலும், ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005 ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புது வாழ்வுத் திட்டத்தையும் தொடங்கி வைத்தது.

மாபெரும் சக்தி
அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

கூட்டமைப்புகள்
தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன.

பயிற்றுநர்கள்
இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் உள்ளனர். சுய உதவிக்குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிந்து வருகின்றனர்.

பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்து கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.

அம்மா கை பேசித் திட்டம்
விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள் வழங்கப்படும் அம்மா கைபேசி திட்டம் என்ற புதிய திட்டம் துவக்கப்படும்.

முதல் கட்டமாக 20,000 பேருக்கு
முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா கைபேசிகளை எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதைப் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ரீசார்ஜ் யார் செய்வாங்க?
இந்த அம்மா கைபேசித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் செல்போன்களுக்கு பெண்களே ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டுமா அல்லது அதற்கு தனியாக ஏதாவது அலவன்ஸ் போல தருவார்களா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications