உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி அறிக்கை வெளியிட்டார் ஜெ.! அதிமுகவினர் அமைதி காக்க வேண்டுகோள்!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி கட்சியினர் அமைதி காக்க வேண்டும்; யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

தமக்கு ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் உறுதி..
உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது இன்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது பாஜகவின் சுப்பிரமணியசாமி, தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் ஜெயலலிதா அதைத் தடுக்கும் வகையில் வேண்டுகோள் வைக்கவில்லை என்றார்.
அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி இருந்த பாலி நாரிமன், தமது கட்சியினரை அமைதி காக்குமாறு ஜெயலலிதா வேண்டுகோள் விடுப்பார்.. அரசியல் தார்மீக நெறிகளை அவர் கடைபிடிப்பார் என்று உறுதியளித்திருந்தார்.
உறுதியளித்தபடி ஜெ. அறிக்கை
இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள், ஆதரவாளர்கள், அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
ஒரு தலைவனைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும் போது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார். பேரறிஞர் அண்ணா வழியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் அவர்களுடைய வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.
எனது வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
என் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும் பற்றின் காரணமாகவும் அன்பின் காரணமாகவும் நீதிமன்றத் தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும்
நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் யார் மீதும் எந்தவிதக் குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம் என்றும்
யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கினை எப்பொழுதும் போல செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும்
எனது அன்பார்ந்த தமிழக மக்களையும் எனது ஆதரவாளர்களையும் என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications