கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. எப்படி தீர்ப்பு வருமோ. திக் திக் திகிலில் அதிமுக. பரபர ஆலோசனைகள்!!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இன்றைய தீர்ப்பு எப்படி இருக்கும்? அடுத்து என்ன நடக்கும்? என திக் திக் திகிலுடன் இருக்கிறது அதிமுக.
அதிமுகவிலும் தலைமைச் செயலகத்திலும் உளவுத்துறையிலும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவது நாளைய தீர்ப்பு பற்றிதான்.. அதிமுகவினரைப் பொறுத்தவரையில் பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் பெங்களூரில் குவிந்துவிட்டனர்.
பெங்களூரில் 25 ஆயிரம் அதிமுகவினர்
சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிமுகவினர் பெங்களூரில் முகாமிட்டுவிட்டனர். இன்றைய தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் ஒருவழியாக்கிடுவது என்ற சபதத்துடன் அங்கு முகாமிட்டுள்ளனர்.
கங்கணத்துடன் அதிமுக..
அங்கே போகாத அதிமுகவினர் தமிழகத்தையும் ஒருவழியாக்கிவிடுவது என்று கங்கணத்துடன்தான் இருக்கிறார்களாம். இந்த பதற்றத்துக்கு மத்தியில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு கிடைத்தால் அடுத்து அதிமுகவில் என்ன நடக்கும்? என்ற விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
நடராஜன் தரப்பு தலையிடுமா?
ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் யார் முதல்வராவது? இல்லை சசிகலா நடராஜன் தரப்பு அதிமுகவை கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? என்பதும் முதன்மை வாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஓ.பி.எஸ்? விசாலாட்சி?
அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கு அரசில், கட்சியில் என்ன இடம் என்பது யாருக்கும் தெரியாதுதான்.. இருந்தாலும் தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லாமல் போனால் ஓ. பன்னீர்செல்வம் அல்லது விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராவவதற்கும் வாய்ப்பிருக்கிறதாம்..
ஜெ.தானாம்..
அதே நேரத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது.. ஜெயலலிதா பதவியை விட்டோ அல்லது அரசியலை விட்டு ஒதுங்கும் அளவுக்கெல்லாம் தீர்ப்பு வராது.. பாருங்கள் என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர் சில உளவுத்துறை அதிகாரிகள்.
ஒரே திகில்
இப்படி என்ன நடக்கும்... ஏது நடக்கும்.. தீர்ப்பு எப்படியோ என்ற பதைபதைப்போடும் திக் திக் மனநிலையோடுதான் உலா வருகின்றனர் அதிமுகவினர்.