அபாய கட்டத்தை தாண்டி விட்டார் ஜெயலலிதா....: பொன்னையன் ஆறுதல் தகவல்
முதல்வர் ஜெயலலிதா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், நுரையீரல் தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். கடந்த 44 நாட்களாக அவர் சிகிச்சையில் இருப்பதால் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவிற்கு பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில், ''முதல்வர் தற்போது பேசுகிறார். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது'' என்று தெரிவித்து இருந்தது.
தினசரியும், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசி வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் இன்று சி. பொன்னையன் பேசினார். அப்போது அவர், ''அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வருக்கு நுரையீரல் தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். நன்றாக சுவாசிக்கிறார் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அவர் கஞ்சி உணவு சாப்பிட்டு வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிப்பவர்களுடன் தற்போது பேசி வருகிறார் என்று அதிமுக மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் கூறியுள்ளது அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.