அதாகப்பட்டது மகா ஜனங்களே.. விரும்பும்போது வீடு திரும்புவார் ஜெ. என ரெட்டி சொன்ன நாள்.. இன்று!
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நலமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும்போது வீடு திரும்புவார் என்றும் கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி பிரதாப் ரெட்டி அறிவித்தார்.
சென்னை: மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் நலமடைந்து விட்டார் என்றும் விரும்பும் போது வீடு திரும்புவார் என்றும் கடந்த ஆண்டு இதே நாளில் டாக்டர் பிரதாப் ரெட்டி அறிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர் உடல்நிலை சிறப்பாக மேம்பட்டிருப்பதாகவும் எப்போது வீடு திரும்புவது என்பதை ஜெயலலிதா முடிவுசெய்வார் என்றும் அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி, முதல்வர் நன்றாக உடல்நலம் தேறியிருப்பதாகக் கூறினார்.

குணமடைந்தார் ஜெயலலிதா
தனக்கு வேண்டியவற்றை அவர் கேட்கிறார் என்றும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்றும் பிரதாப் ரெட்டி கூறினார். பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் இணைந்து முதல்வரைக் குணப்படுத்தியிருப்பதாக பிரதாப் சி ரெட்டி கூறினார்.

விரும்பும் போது வீடு திரும்புவார்
எப்போது சாதாரண அறைக்குச் செல்வார், வீடு திரும்புவார் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தது என்றும் சிகிச்சையின் முக்கியமான பகுதியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுதான் கவனிக்கத்தக்கது என்றும் பிரதாப் ரெட்டி கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா முடிவு
தான் எப்போது வீடு திரும்பி, அரசுப் பணிகளைக் கவனிப்போம் என ஜெயலலிதா எதிர்பார்த்திருப்பதாகவும் ஆனால், எப்போது வீடு திரும்புவது என்பதை ஜெயலலிதா முடிவுசெய்வார் என்றும் பிரதாப் ரெட்டி குறிப்பிட்டார்.
|
ஜெயலலிதா கடிதம்
பிரதாப் ரெட்டி பேசிய சில தினங்களில் ஜெயலலிதா எழுதியதாக கூறி ஒரு கடிதம் வெளியானது.
மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. முதலில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் இருந்தது; பின்னர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன் அதே அறிக்கை மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இயற்கையாக சுவாசிக்கிறார்.
நவம்பர் 17 ஜெயலலிதாவின் நுரையீரல் தொற்று சரியாகி சுவாசக் குழாயின்றி மூச்சு விடுவதாக அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார். செயற்கை சுவாசத்துக்குப் பதிலாக முதல்வர் இயற்கையாகவே சுவாசிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வழக்கமான உணவையே உட்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம்
நவம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதாவின் உடல்நிலை பூரண குணமடைந்து விட்டதாக டாக்டர் பிரதாப் ரெட்டி கூறிய நிலையில் அடுத்தடுத்து வெளியான சம்பவங்களும் ஜெயலலிதா நலமடைந்தார் என்பது போலவே செய்திகள் வெளியாகின. ஆனால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் காட்சிகள் மாறின. டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த ஜெயலலிதா சடலமாகவே போயஸ் கார்டனுக்கு கொண்டு வரப்பட்டார்.












Click it and Unblock the Notifications