ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி- கதறி கண்ணீர் விட்ட ஓபிஎஸ் #jayalalithaa
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, இதயம் செயலிழந்ததால் நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்ப முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆறுமணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. சென்னை வந்த பிரதமர் மோடி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெயலலிதா உடல் மீது அவருக்கு பிடித்த நிறமான பச்சைப்பட்டு உடுத்தப்பட்டு, அதிமுக கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அரசு மரியாதை செய்யப்பட்டு அவர் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் மோடி புறப்பட்ட மோடி, அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலாவிடம் சென்று பேசினார். தலையை தொட்டு ஆறுதல் சொன்னார் மோடி, ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆறுதல் வார்த்தைகள் கூறினார். அப்போது ஓ. பன்னீர் செல்வம் கண்ணீர் விட்டு அழுதார். அவரை பிரதமர் மோடி ஆறுதல்படுத்தினார்.
கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் பிரதமர் மோடி. அனைவரின் கைகளை பிடித்தும் ஆறுதல் சொன்னார். இறுகிய முகத்துடன், கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர்களும், 15 மாநில முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினர்.