அம்மா மீண்டு வரணும்... தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஒரே நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி நேற்று, தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் ஒரே நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவரது உடல்நிலை பற்றிய புதிய தகவல்கள் எதுவும் தெரியாததால் அதிமுக தொண்டர்கள் கவலையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். ஜெயலலிதா நலம்பெற அமைச்சர்களும், மாவட்டத் தலைவர்களும் வழிபாடுகளை விடாமல் தொடர்ந்து நடத்துமாறு வேண்டுகோள் விடுத்து அதன்படி வழிபாடுகளும் நடந்து வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சேனியம்மன் கோவிலில் பால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஓட்டேரியில் உள்ள கோசாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோபூஜை செய்து பிரமாண்ட யாகம் நடத்தி அங்குள்ள பசுமாடுகளுக்கு ஒருநாள் முழுவதும் தேவைப்படும் புல், புண்ணாக்கு, பழங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
20 ஆயிரம் பேர் விளக்கு பூஜை
மணலி சாலை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ஹோமம் வளர்ப்பு மற்றும் திருவிளக்கு பூஜை பிரமாண்டமாக நடந்தது. 20 ஆயிரம் பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு அதில் வினாயகர், பெருமாள், பிரத்தியங்கரா தேவி, முருகன் ஆகிய தெய்வ சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு யாகம்
யாககுண்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு 10க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் கணேச குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் ஓதினார்கள். கணபதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஆயுள் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கரா ஹோமம், தன்வந்திரி ஹோமம், அம்ருத மிருத்தியஞ்ய ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் மிக பிரமாண்டமாக 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
கூட்டு பிரார்த்தனை
ஜெயலலிதா பூரண நலம் பெற கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொள்ள வந்த பெண்களுக்கு விளக்கு பூஜை நடந்த திடலின் நுழைவு வாயிலிலேயே காமாட்சி பித்தளை விளக்கு, பித்தளை தட்டு, தேங்காய், பழம், இலை, குங்குமம், சந்தனம், மஞ்சள், எண்ணை பாக்கெட்டுகள், திரி, தீப்பெட்டி, மஞ்சள் அரிசி, ஊதுபத்தி, கற்பூரம், திருநீறு, பூ, வெற்றிலைபாக்கு, தண்ணீர் பாட்டில் ஆகிய அனைத்தும் வழங்கப்பட்டன. அத்துடன் பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டும் வழங்கப்பட்டது.
பெண்கள் 6 வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் விளக்கு ஏற்றி ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
ஒரே நேரத்தில் திருவிளக்கு பூஜை
முதல்வர் ஜெயலலிதா குணமடைய தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஒரே நேரத்தில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என ஆன்மிக குரு ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, சென்னை பெரியபாளையத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா தானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் கலந்து கொண்டு கோமாதா தானம் செய்தார். இதில் நூற்றுக்கணக்கான அதிமுக-வினர் கலந்து கொண்டனர்.
நத்தம் விஸ்வநாதன் விளக்கு பூஜை
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் அதிமுக-வினர் சிறப்பு விளக்கு பூஜை செய்தனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் ஆலயத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட அதிமுகவினர் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் விளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள திருக்கோயில்களில்அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதேபோல், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அதிமுகவினர் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.