விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை: ஜெ., இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைக்கிறார்.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டன. இதில் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.
இதையடுத்து சின்னமலை - விமான நிலையம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச் செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலும் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications