ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசம் சரி்ஞ்சு போச்சே!
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஆர். கே.நகர் இடைத்தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனை விட 39,537 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்கு இம்முறை குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். இதற்குக் காரணம் இம்முறை திமுக சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதோடு பலமுனை போட்டி நிலவியதும் காரணமாக உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழனை போட்டியிட்டார். தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை வேந்தரான வசந்தி தேவி போட்டியிட்டார்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்.கே.நகரில் அதிமுக முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜெயலலிதா 96,269 வாக்குகள் பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம், 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை 9 முறை சட்டசபைத் தேர்தல்களில் ஜெயலலிதா போட்டியிட்டுள்ளார். தற்போது 7வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். ஒருமுறை அவர் தோல்வியடைந்துள்ளார்.
போடியில் முதல் வெற்றி
1989 ம் ஆண்டு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது தென் தமிழகத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியில் ஜெயலலிதா 57,603 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் முத்து மனோகரன் 28,872 வாக்குகளையும் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 28,731.
பர்கூர்
1991ம் ஆண்டு எல்லை பகுதியான பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். பர்கூரில் ஜெயலலிதா 67,680 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தர் 30,465 வாக்குகளையும் பெற்றார். வாக்கு வித்தியாசம் 37,215.
காங்கேயம்
காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா 69,050 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ராஜ்குமார் மன்றாடியார் 35,759 வாக்குகளையும் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 33,291. எனினும் காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா.
1996ல் தோல்வி
1996ம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தி.மு.க.வின் சுகவனம் 59,418 வாக்குகளை பெற்று வென்றார். ஜெயலலிதா 50,782 வாக்குகளை பெற்று 8,639 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
வேட்புமனுக்கள் தள்ளுபடி
2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாலும் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆண்டிபட்டி இடைத்தேர்தல்
ஆண்டிபட்டி 2002ம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில் ஜெயலலிதா 78.437 வாக்குகளையும், தி.மு.க.வின் வைகை சேகர் 37,236 வாக்குகளையும் பெற்றார். வாக்கு வித்தியாசம் 41,201.
2006ல் மீண்டும் ஆண்டிபட்டி
2006ம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 73,927 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் தி.மு.க.வின் சீமான் பெற்ற வாக்குகள் 48,741 வாக்குகள். வாக்கு வித்தியாசம் 25,186.
2011ல் ஸ்ரீரங்கம்
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ஆனந்த் 63,480 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம்.
பதவியிழப்பு
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அவரது எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது.
5வது முறையாக முதல்வர்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்ததை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார்.
2016 மீண்டும் ஆர்.கே.நகர்
ஜெயலலிதா 96,269 வாக்குகள் பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம், 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்.
குறைந்து போன வாக்குகள்
2015ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்திருந்தனர். ஆனால், இம்முறை அவரின் வாக்கு வித்தியாசம் பாதியாகக் குறைந்துள்ளது. தனது முந்தைய சாதனையை தக்க வைக்க அவர் தவறியுள்ளார்.
காரணம் என்ன?
கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. சிபிஎம் வேட்பாளர் மகேந்திரன் மட்டுமே போட்டியிட்டார். எனவே ஓட்டுக்கள் அனைத்து மொத்தமாக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. இம்முறை திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவியது. எனவே வாக்குகள் அனைத்து பிரிந்ததே ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசம் குறைய காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications