தமிழக மீனவர்கள் தொடர் சிறைபிடிப்பு... நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 15 பேர் மற்றும் 90 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பிய கடிதம்:
தமிழக மீனவர்கள் 4 பேர் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட மற்றொரு சம்பவம் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒரே வாரத்தில் தமிழக மீனவர்கள் இப்படி சிறை பிடிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

வலுவான நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடந்த 4-6-16 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அதிகாலை நேரத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் காங்கேசன்துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் தொடர்ந்து இப்படி பாதிக்கப்படுவது குறித்து நான் ஏற்கனவே பல முறை உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக மீனவர்களின் நலனையும் உரிமையையும் காக்க தாங்கள் வெளியுறவு அமைச்சகம் மூலம் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கச்சத்தீவுதான் காரணம்....
தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை அப்பாவி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்வாதாரம் தொடர்பான இந்த முக்கிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அச்சம் ஏற்படுத்தும் வகையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவை கொடுப்பதற்காக இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட சட்ட விரோதமான ஒப்பந்தங்களே இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

90 படகுகள்
மேலும் சமீபகாலமாக இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி ஒப்படைக்காமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் தந்திரத்துடன் நடந்து கொள்கிறது. இது இந்த பிரச்சினையை அதிகரிக்க செய்துள்ளது. தற்போது இலங்கை அரசின் வசம் தமிழக மீனவர்களின் 90 படகுகள் உள்ளன. அந்த படகுகள் நீண்ட நாட்களாக பயன்படுத்ததாததால் சேதம் அடைந்து வருகின்றன.

நேரடி தலையீடு
எனவே தாங்கள் உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு தூதரக மட்டத்தில் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் அமைதியாக மீன்பிடி தொழில் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் தாங்கள் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
அதோடு இலங்கை அரசு கடந்த 4-6-16 அன்று சிறைபிடித்த 4 பேர் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 15 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 90 படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications