சென்னை நீதிபதி வீட்டில் துணிகரம்... 30 பவுன் நகைகள் கொள்ளை!
சென்னை: சென்னை 6வது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி ஜஸ்டின் டேவிட் வீட்டில் புகுந்த திருடர்கள் அங்கிருந்து 30 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி ஜஸ்டின் டேவிட் தனது குடும்பத்தினருடன் சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள பி-பிளாக், 13-வது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையையொட்டி, தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கடந்த 28-ந்தேதி நீதிபதி ஜஸ்டின் டேவிட் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
நேற்று காலை நீதிபதி ஜஸ்டின் டேவிட் வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அருகில் வசித்து வரும் நீதிபதி ஒருவர் எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கும், நீதிபதி ஜஸ்டின் டேவிட்டுக்கும் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு எழும்பூர் போலீசார் சென்று பார்வையிட்டனர்.
அப்போது நீதிபதி ஜஸ்டின் டேவிட் வீட்டின் கதவு லாக்கர் திருட்டு சாவி மூலம் திறக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வீட்டின் உள்ளே சென்று போலீசார் பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, பீரோவிலேயே சாவி தொங்கிக் கொண்டிருந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 30 சவரன் நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. 2 அல்லது 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டு கதவு, பீரோவில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிபதி ஜஸ்டின் வீட்டு கதவை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.