பாண்டி கல் விளையாடு..'வாட்ஸ் அப்' கலந்துரையாடல்...அரவக்குறிச்சி காங். வேட்பாளராக களமிறங்கிய ஜோதிமணி!
அரவக்குறிச்சி: காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் 'தீவிரமாக' தேர்தல் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார் காங். பெண் பிரமுகர் ஜோதிமணி.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணிகள் எப்படி அமையப் போகின்றன என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வருகின்றன. இனி அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைந்து, தொகுதிகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பெரும் களேபரம் நடந்தேறி இறுதிவடிவம் பெற வேண்டும்.
2 முறை தோல்வி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியோ, அரவக்குறிச்சி தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 2011 சட்டசபை 2014 லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் ஜோதிமணி. ஆனாலும் அசராமல் இருக்கிறார்...
தீவிர பிரசாரம்
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பதவி வகித்தவர் ஜோதிமணி. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக அரவக்குறிச்சி தொகுதியில் முகாமிட்டு 'தொகுதியை' தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த தொகுதிக்குட்பட வாட்ஸ் அப் நண்பர்கள் குழுவையும் சந்தித்து பேசுகிறார்...
பாண்டி கல் விளையாட்டு
சின்னக் குழந்தைகளையும் கூட தமது பிரசாரத்தின் போது கவராமல் விட்டுக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.. இதற்காக ஊர் திண்ணைகளில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளோடு குழந்தைகளாக ' பாண்டி கல்' உள்ளிட்ட விளையாட்டுகளை சகஜமாக விளையாடுகிறார்... இதன் உச்சகட்டமாக அரவக்குறிச்சி தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தன் படம் பொறித்த காலண்டரையும் வழங்கி வருகிறார் ஜோதி மணி.
வீட்டு வீடு காலண்டர்
இந்த காலண்டர் விவகாரமும் தற்போது அரசியல் பிரச்சனையாக வெடித்திருக்கிறது.. அதாவது லோக்சபா தேர்தலின் போது தம்மிடம் கையிருப்பாக ரூ2,400தான் இருக்கிறது என புலம்பிய ஜோதிமணி, தற்போது இத்தனை லட்சம் ரூபாய் மதிப்பில் காலண்டர் வழங்க காசு ஏது? என சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.
தொகுதி கிடைக்குமா?
இவைஒருபுறம் இருக்க, அரவகுறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவின் கரூர் கே.சி. பழனிச்சாமி. தி.மு.கவின் பெரும்புள்ளியான இவரை அவ்வளவு எளிதாக மேலிடம் விட்டுவிடாது.. மேலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையும் என்கிற நிலையில் ஜோதிமணியின் இந்த பிரசாரத்தை திமுகவினர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.