புழல் சிறையில் ராம்குமார் மரணம்- நீதி விசாரணைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல் #Ramkumar
சென்னை: புழல் சிறையில் ராம்குமாரின் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமென ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராம்குமார் தற்கொலை குறித்து இன்று நீதி விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் நேற்று புழல் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.
இவரது உடல் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராம்குமார் மரணம் பற்றி உயர்நீதிமன்ற தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்டாலின் அறிக்கை
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனப் புழல் சிறை நிர்வாகம் தெரிவித்திருப்பது ஏற்கக் கூடியதாகவும், நம்பும்படியாகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் தற்கொலை அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் தருவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், சிறையில் ராம்குமாரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறியுள்ளார். எனவே, ராம்குமார் தற்கொலை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்த வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை, சிறை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது எனக் கேள்வி எழுப்பி உள்ளார். ராம்குமாருக்கு சிறை நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா என சந்தேகம் எழுப்பியுள்ள ஜி.ராமகிருஷ்ணன், ராம்குமார் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமார் மரணம், சிறைச் சாலையில் கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய காவலர்களின் அலட்சியப் போக்கையும், போதிய பாதுகாப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.விசாரணை நடந்து வந்த நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி விசாரணை
புழல் சிறையில் நடந்த ராம்குமார் தற்கொலை குறித்து இன்று நீதி விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவியல் நடைமுறைப் சட்டப் பிரிவு 176 (1) ஏவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை முன்னிட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் முன்பு இன்று பிரேத பரிசோதனை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை வீடியோ
இரண்டு தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு இன்று பிரேத பரிசோதனை நடத்தும். பிரேத பரிசோதனை வீடியோ செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவியல் நடுவர் இன்று புழல் சிறையிலும் விசாரணை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications