கைத்தாங்கலாக காவிரி மருத்துவமனை வந்த க. அன்பழகன்.. நெகிழ வைக்கும் கருணாநிதியுடனான நட்பு
சென்னை: கருணாநிதியின் உயிருக்கு உயிரான நண்பரும், திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் இன்று, காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தார்.
1942ஆம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்து கொள்ள பேரறிஞர் அண்ணா வந்தபோது, அந்த விழாவுக்கு கருணாநிதியும் சென்றிருந்தார்.
இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா எழுந்து, நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார் என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். அந்த இளைஞர் தான் பேராசிரியர் க.அன்பழகன்!
நட்பு மலர்ந்தது
அப்போது கருணாநிதிக்கும், க.அன்பழகனுக்கும், முகிழ்த்த நட்பு, எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றுக்கிடையே மணிவிழா கண்டு அதற்கு மேலும் திமுகவிற்கு துணையாக இருந்து நடத்தி வருகிறார்கள். இருவர் நட்புக்கு மற்றொரு சம்பவமும் உதாரணம் உண்டு. பதினெட்டு வயது இளைஞனாக மாணவ நேசன் என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை கருணாநிதி, நடத்திக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி நடத்த முற்பட்டார். அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942இல் திருவாரூரில் நடைபெற்றது.
ஆதரவாக தோளோடு தோள் நின்றார்
அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு எதிர் பார்த்து, அவர்களை வரவேற்க திருவாரூர் ரயில் நிலையத்திலே கருணாநிதி காத்திருந்தபோது, அவர்களில் பலர் வரவில்லை என்று தெரிந்து கண்களிலே கருணாநிதிக்கு நீர் பெருகிவிட்டதாம். அப்போது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அன்பழகனும், மதியழகனும் அங்கு வந்து கருணாநிதிக்கு ஆறுதல் வழங்கினார்களாம்.
கருணாநிதியின் நிழல்
கருணாநிதிக்கு, துணையாக 1942இல் அங்கே அன்பழகன் வந்தபோது கருணாநிதி வயது 18. அப்போது கருணாநிதியின் துணைக்கு தோளோடு தோள் சேர்க்க வந்த பேராசிரியர், இன்று இருவருக்கும் 90 வயது கடந்த பிறகும், (அன்பழகன் வயது 96) கருணாநிதிக்கு துணையாக இருக்கின்றார்.
இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - திமுகவில் உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழகன் உடன்பிறப்பாக விளங்கி வருகிறார்.
சாதனையாளர்
நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர், வைகோ என கருணாநிதிக்கு நெருக்கமான பலரும் தனிக்கட்சிகளுக்கு சென்றபோதிலும், திமுகவின் நெருக்கடிகளிலும் அறிவாலயமே என்றும் தமது வாழ்விடம் என்பதையே நோக்கமாக கொண்டவர் க.அன்பழகன். முரசொலி மாறனை தனது மனசாட்சி என வர்ணிப்பார் கருணாநிதி. க.அன்பழகன் கருணாநிதியின் நிழல் என சொல்ல முடியும். திராவிட கொள்கை மீதான அபார பற்று காரணமாகத்தான் இன மான பேராசிரியர் என்ற அடைமொழி அவருக்கு உள்ளது. 1977முதல் திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் தொடரும் அன்பழகன், சட்டசபை, லோக்சபா உறுப்பினர், அமைச்சர் என பல தளங்களில் பணியாற்றியவர்.
கைத்தாங்கலாக வந்த க.அன்பழகன்
கர்ணன்-துரியோதனன் நட்பை புராணங்களில் மிக உயர்வாக கூறுவார்கள். சம காலத்தில் கருணாநிதி-அன்பழகன் நட்பை அதற்கு உதாரணம் கூறுகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை இன்று க.அன்பழகன் நலம் விசாரிக்க வந்தபோது அவரது முகத்தில் பெரும் கவலை ஏற்பட்டிருந்தது. கைத்தாங்கலாக அவர் நடந்து வர காரணம் வயோதிகம் மட்டுமின்றி, தனது நண்பரின் உடல் நலம் குறித்த கவலையும்தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.