பாஜகவுக்கு எதிராக பேசியதற்கு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதா? : கேசி பழனிச்சாமி கேள்வி
பாஜகவுக்கு எதிராக பேசியதற்கு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்கியது ஏன் என்று கேசி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

கோவை: அதிமுகவுக்கு எதிராக பேசியிருந்தால் கட்சியை விட்டு நீக்கலாம், பாஜகவுக்கு எதிராக பேசியதற்கெல்லாமா கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வரும் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நீக்கிவிட்டனர்.

ஆங்கில நாளிதழுக்கு
இதுகுறித்து கேசி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்பதால் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். ஆனால் கட்சியின் எம்பி வேணுகோபால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்று ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பல அமைச்சர்கள் பேச்சு
அவரை என்றைக்கு கட்சியை விட்டு நீக்க போகிறார்கள் என்பதை எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் தெரிவிக்க வேண்டும். பல அமைச்சர்கள் பல நேரங்களில் கட்சி நடவடிக்கைகளுக்கு விரோதமாக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தனிப்பட்ட கருத்து
அந்த சமயத்தில் அதிமுக தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அது அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்து என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். யாரையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை.

நண்பர்கள் ஆதரவு
ஜெயலலிதா காலத்தில் இருந்த கட்டுப்பாடு என்று சொல்கிறார்கள். ஜெ.காலத்தில் அதிமுக கட்சிக்கு எதிராக பேசினால் மட்டுமே கட்சியிலிருந்து நீக்குவார்கள். ஆனால் பாஜகவுக்கு எதிராக பேசிய அதிமுக உறுப்பினராகிய என்னை கட்சியிலிருந்து நீக்குவது என்றால் பாஜகவுடன் அதிமுகவை இணைத்து விட்டார்களா. இதுபோன்ற கேள்விகளை அதிமுகவில் உள்ள நண்பர்கள் என்னிடம் கேட்டு எனக்கு ஆதரவாக எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள் என்றார் கேசி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications