ஓபிஎஸ்... ஈபிஎஸ்... பன்னீர்... வெந்நீர்... - வெளுத்து வாங்கிய கி. வீரமணி
கொத்தடிமை ஆட்சியை இந்திய வரலாற்றில் பார்த்ததே இல்லை என்று வீரமணி கூறியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வில் ஓராண்டு விதி விலக்கு என்று கூறி நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள் என்று கி. வீரமணி கூறியுள்ளார்.
திருச்சியில் திமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய கி. வீரமணி, மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல செய்தி வரும் என்று குடுகுடுப்பைகாரன் போல சொல்லி அனிதா போன்ற ஏழை மாணவர்களை ஏமாற்றி விட்டார்கள்.
அனிதா போன்ற ஏழை மாணவர்களின் கனவுகளை சிதைத்து விட்டது நீட் தேர்வு. நீட் தேர்வை சவப்பெட்டியில் வைத்து அறையும் வரை போராட வேண்டும். அதற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டது ஏன்?
இது தளபதி ஸ்டாலின் ஆளப்போகிற மண். இனி இங்கே நீட் இருக்கக் கூடாது. நாளுக்கு ஒரு கூத்து நடத்தி மிகப்பெரிய மோசடி நடத்தி விட்டார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர் மாணவர்கள்.
நீட் தேர்வை சவப்பெட்டிக்குள் வைத்து ஆணியடிக்கும் வரை ஓயமாட்டோம். நீட் தேர்வு மோடி அரசின் மோசடி வேலை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி வைப்பது ஏன்?
சிபிஎஸ்இ பாடத்திட்டம் மட்டுமே உயர்வு அல்ல. சமச்சீர் கல்வி திட்டம் சிறந்த பாடத்திட்டங்களை கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக ஈபிஎஸ், ஓபிஎஸ் பன்னீர், வெந்நீர் யாருமே வாயை திறக்கவில்லை என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. சலுகை கேட்கவில்லை. அனிதா போன்ற ஏழை மாணவிகள் மேலே வரவேண்டும் என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
ட்விட்டர், பேஸ்புக் இணைய இளைஞர்களே போராட தயாராகுங்கள் என்று கூறி அமர்ந்தார் கி. வீரமணி.