கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.. கி.வீ. பேச்சு
அவரது பேச்சு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி குறித்துத்தான் என்று கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் இல்ல திருமண விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெயின் பள்ளியில் உள்ள அரங்கில் இன்று நடந்தது.
இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கி.வீரமணி பேசுகையில், எப்போதுமே விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள். கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இன்று மண வாழ்க்கைய தொடங்கி உள்ள மருத்துவர்களாகிய நீங்கள் சமுதாய மருத்துவர்களாகவும் விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த திருமணம் சுயமரியாதை திருமணம் போல் நடைபெற்று இருப்பதாக ஆசிரியர் வீரமணி குறிப்பிட்டார்.
1967-க்கு முன்பு வரை தமிழகத்தில் சுய மரியாதை திருமணங்கள் செல்லுபடியாகாமல் இருந்தது. 67-ம் அங்கு நடைபெற்ற பொது தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்வர் ஆனார். சட்ட பேரவையில் முதல் தீர்மானமாக சுய மரியாதை திருமணம் செல்லும் என்று கொண்டு வந்தார்.
வைதீக முறைப்படி நடக்கும் திருமணங்களும், சீர்திருத்த திருமணங்களுக்கும் நிறையவேறுபாடுகள் உள்ளன. வைதீக திருமணத்தில் மணமக்கள் இருக்கும் அருகிலேயே ஓம குண்டத்தை வளர்த்து புகை மூட்டத்தை ஏற்படுத்துவார்கள்.
இதில் மணக்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் வரும். வாழ்த்த வந்த நாமும் கண்ணீர் வடிப்போம். புரோகிதர் சொல்வது யாருக்கும் புரியாது. அவரிடம் சென்று கேட்டால் எனக்கும் தெரியாது என்பார். ஆனால் இன்று நடைபெற்ற திருமணத்தில் அனைவருமே மணமக்களை தமிழில் வாழ்த்தினோம். எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் கலைஞர் சார்பில் மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஸ்டாலின் போனதும் வந்த கனிமொழி - சுதீஷ்
மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பிய பின்னர் திமுக எம்.பியும், அவரது சகோதரியுமான கனிமொழி வந்து மணமக்களை வாழ்த்தினார். அதேபோல விஜயகாந்த்தின் மச்சானும், தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான சுதீஷும், ஸ்டாலின் போன பிறகே வந்தார்.