பாஜக செல்லப்பிள்ளை செங்கோட்டையனுக்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. எடப்பாடிக்கு செம்ம ஷாக் தரும் டெல்லி!
சென்னை: டெல்லி பாஜக மேலிடத்தின் செல்லப்பிள்ளையாகிவிட்ட அதிமுகவின் கலகக் குரல், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கும் அறிவிப்பை எந்த நேரத்திலும் வெளியிடக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பின் போது தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்ததையடுத்து இந்த Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதுதான் மத்திய அரசின் அறிவிப்பாக இருக்குமாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவிடுவது என்பதில் மும்முரமாகவே இருக்கிறது பாஜக. அதுவும் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் மட்டுமே பாஜக கூட்டணி அமைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறதாம்.

டெல்லியில் தம்மை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழுவிடம் இதனை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம் அமித்ஷா. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அதிமுகவில் இருந்து தம்மால் நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால் எடப்பாடி பழனிசாமி மீது டெல்லி பாஜக மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
இதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார் அமித்ஷா. ஆனால் எடப்பாடி பழனிசாமியால்தான், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என வெளியே பகிரங்கமாக சொல்ல முடியாமல் தத்தளித்து வருகிறாராம்.
இந்த பின்னணியில்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவின் குரலான, கே.ஏ.செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் எடப்பாடி பழனிசாமி தரப்பை ரொம்பவே ஆடிப் போக செய்துவிட்டதாம்.
டெல்லி பாஜக மேலிடம் சொல்வதைப் போல ஒருங்கிணைந்த அதிமுக என்ற நிலைமை உருவாகாமல் போனால், பாஜகவே அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும்; இதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படாமல் முட்டுக்கட்டையாக இருந்தால் அவருக்கு எதிரான பொதுக்குழுவை கூட்டி கே.ஏ.செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்கி ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதன் முதல் கட்டம்தான் செங்கோட்டையனின் டெல்லி சந்திப்புகளாம்; இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த அதிர்ச்சியைத் தரும் வகையில், செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு தரப்போகிறதாம் டெல்லி. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது செங்கோட்டையன் வைத்த கோரிக்கையால் Y பிரிவு பாதுகாப்பு தரப்படுகிறது என அறிவிக்குமாம் டெல்லி.
இதன் மூலம், செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததை உறுதி செய்வதுடன், எடப்பாடி பழனிசாமிக்கான டெல்லியின் இறுதி எச்சரிக்கை மணியாகவும் இருக்கும் என்கின்றன பாஜக வட்டாரங்கள். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்த நாட்களில் மிகப் பெரும் குழப்பமும் பரபரப்பும் காத்திருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications