கசிந்தது கபாலி போட்டோ ஷூட் ஸ்டில்... கமிஷனர் அலுவலகத்தில் புகார்?
இந்த ஆன்லைன் யுகத்தில் எதையும் ஒளித்து மறைத்து வைக்க முடியாத நிலை. ரகசியம் என நினைத்து நாம் பொத்திப் பொத்தி வைக்கும் விஷயங்கள், அதே வேகத்தில் அம்பலத்தில் நிற்கின்றன.
ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அவரவர் இஷ்டப்படி எழுதி வந்த நிலையில், இப்போது அந்த போட்டோ ஷூட் படம் ஒன்றே வெளியாகி அதிர வைத்துள்ளது.
கடந்த வாரம் சென்னை ஏவிஎம்மில்தான் ரஜினி பங்கேற்ற கபாலி போட்டோ ஷூட் நடந்தது. ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள். செய்தியாளர்கள் ஏவிஎம் காம்பவுண்டோடு நிறுத்தப்பட்டார்கள்.
ஆனால் இந்த கெடுபிடிகளை மீறி ஒரு ஸ்டில் வெளியாகிவிட்டது. அது போட்டோ ஷூட் எடுத்த பிறகு, அந்த ஸ்டில்களை ரஜினிக்கு இயக்குநர் ரஞ்சித் மற்றும் புகைப்படக்காரர்கள் போட்டுக் காட்டும் காட்சி. அதில் ரஜினி வெள்ளைத் தாடி மற்றும் கறுப்பு - வெளுப்பு கலந்த முடியுடன் காட்சி தருகிறார். அதை வைத்து ரஜினியின் கெட்டப்பை ஓரளவு யூகித்துவிட முடியும்.
இந்த ஸ்டில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. படக்குழுவுக்குள் அல்லது இந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட யாரோ ஒருவர்தான் இந்த ஸ்டில்லை லீக் செய்திருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. நாளை இதோ போல வேறு முக்கியமான ஸ்டில்களையும் லீக் செய்யும் முன் உஷாராகிவிட வேண்டும் என்பதால், இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்ய முடிவெடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் தாணு.