அந்த மனசுதான் சார்.. துருக்கி மக்களுக்காக களமிறங்கிய நம்ம கள்ளக்குறிச்சி மாணவர்கள்.. தழைக்கும் மனிதம்
இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்தமாக துருக்கியின் ரூ.9.2 லட்சம் கோடி சொத்துக்களை அழித்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி துருக்கியில் அதிகாலையில் பதிவான நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சரித்தது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டனர். மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டது. இதில் மீதமிருந்த கட்டிடங்களும் நொறுங்கி விழுந்தன.
நிலநடுக்கத்தால் மொத்தமாக 16,000 கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 50,000ஐ கடந்திருக்கிறது. துருக்கியில் மட்டும் 44,218 பேரும், சிரியாவில் 5,914 பேரும் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் பூகம்பம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஒன்றாக துருக்கியும் இருக்கிறது. இந்நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

வீடற்றவர்களாக 15 லட்சம் பேர்
சூழல் இவ்வாறு இருக்க வீடு இழந்தவர்கள் அனைவருக்கும் ஓராண்டுக்குள் வீடுகள் கட்டி தரப்படும் என துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் உறுதியளித்துள்ளார். ஆனால், அவசர அவசரமாக வீடுகளை கட்டுவதைவிட நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் வீடுகளை கட்டுவது தான் சிறந்தது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். துருக்கியில் மட்டும் ஏறத்தாழ 15 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக இருக்கின்றனர். தற்போது அந்நாட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்பொழிவு காரணமாக வீடற்ற மக்கள் சிரமத்தை எதிர் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உடனடியாக 5 லட்சம் வீடுகள் தேவைப்படுகிறது.

நிதி தேவை
இவ்வளவு பெரிய கட்டமைப்புகளை உருவாக்க ரூ.82 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இடிபாடுகளை அகற்ற உடனடியாக ரூ.900 கோடி தேவைப்படுகிறது. ஆக இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்தமாக துருக்கியின் ரூ.9.2 லட்சம் கோடி சொத்துக்களை அழித்திருக்கிறது. இது அந்நாட்டின் ஜிடிபியில் 10 சதவிகிதமாகும். இது தவிர நாட்டின் வருமானம் சுமார் ரூ.86 ஆயிரம் கோடி இழக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாமும் ஒரு சராசரியான மதிப்பீடுதான். இடிபாடுகளை முற்றிலுமாக அகற்றினால்தான் எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து முழுமையாக தெரியவரும்.

உதவிக்கரம்
இந்நிலையில் உலக நாடுகள் பல துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சின்ன மணியாந்தல் அரசு பள்ளி மாணவர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரித்துள்ளனர். ஊர் முழுவதும் ஊர்வலமாக சென்ற மாணவர்கள், "துருக்கி சிரியாவுக்கு நிதியுதவி செய்வோம்" என்று முழக்கமிட்டவாறு நிதி வசூல் செய்துள்ளனர். இதில் மொத்தம் ரூ.7,000 வரை கிடைத்துள்ளதாகவும், அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மாணவர்கள் வசூல்
சிறு துளி பெரு வெள்ளம் என்கிற தத்துவத்திற்கு உதாரணமாக அவர்கள் சேகரித்துள்ள நிதி இந்தியா சார்பில் வழங்கப்படும் நிதியுடன் சேர்த்து வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். காலில் செருப்புக்கூட இல்லாமல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாணவர்கள் நிதி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications