சென்னையில் ராட்சத பள்ளத்தில் கார் சிக்கிய அதிர்ச்சியே போகல.. உள்வாங்கிய கள்ளக்குறிச்சி மேம்பாலம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி அப்படியே உள்வாங்கியது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூரில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் ஆளூர்- மொகலார் இடையே புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறுவதற்கு தயாராக இருந்த மேம்பாலம் திடீரென உள்வாங்கியது.

கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ 12 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது உள்வாங்கியுள்ளது.
மேம்பாலம் உள்வாங்கிய வீடியோ வைரலான நிலையில் தரமற்ற முறையில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதாகவும் இந்த மேம்பாலத்தை தரமாக மாற்றும் வரை திறக்கக் கூடாது என்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு கார் ஒன்று சிக்கிய அதிர்ச்சி சம்பவம் போகும் முன்பே தற்போது கள்ளக்குறிச்சியில் மேம்பாலம் சேதமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில் ஒரு கார் அப்படியே கவிழ்ந்தது. மெட்ரோ ரயில் பணியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
அதனால் இந்த விபத்திற்கும் மெட்ரோ ரயில் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்புதான் உள்ளது. ரயில் சுரங்க பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டனர். டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதால் அண்ணா சாலையில் கூட ஒரு முறை சாலையில் திடீரென பள்ளம் உருவானது. அண்ணா மேம்பாலம் அருகில் 12 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தில் சென்னை மாநகர அரசுப் பேருந்தும் காரும் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 37 பயணிகள் இருந்துள்ளனர்.
அவர்களில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. காரை ஓட்டி வந்தவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. பள்ளத்தில் விழுந்த பேருந்தையும் காரையும் ராட்சத கிரேன் கொண்டு மீட்டெடுத்தனர். இந்த சம்பவத்தால் அண்ணாசாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications