கள்ளக்குறிச்சி: திருமாவளவனுடன் அதிமுக நாச்சியாள் சுகந்தி வாக்குவாதம்- வெளியேற்றிய போலீஸ்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார். கள்ளக்குறிச்சியில் திருமாவளவனுடன் அதிமுக பிரமுகர் நாச்சியாள் சுகந்தி திடீரென வாக்குவாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து போலீசார் அதிமுக நாச்சியாள் சுகந்தியை வெளியேற்றினர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயமானது 55 உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஒவ்வொரு வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி குடும்ப நிலவரங்களைக் கேட்டு தலா ரூ10,000 நிதி உதவி வழங்கினார். இதேபோல நேற்றும் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த நாச்சியாள் சுகந்தி, திருமாவளவனுடன் திடீரென வாக்குவாதம் செய்தார். தமிழ்நாடு சட்டசபையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார் நாச்சியாள் சுகந்தி. இதனையடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது. நாச்சியாள் சுகந்திக்கு எதிராக விசிக தொண்டர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதனால் போலீசார் அந்த இடத்தில் இருந்து அதிமுகவின் நாச்சியாள் சுகந்தியை வெளியேற்றினர்.

இதேபோல நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனும் நேற்று கள்ளக்குறிச்சி சென்றிருந்தார். அப்போது முகில் வீரப்பன் என்பவர் சாட்டை துரைமுருகனுடன் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சாட்டை துரைமுருகன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து உண்மை கள நிலவரத்தை அறிந்து திரும்பும் போது முகில் வீரப்பன் என்கிற நபர் குடிபோதையில் அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார். அதை நாம் தமிழர் கட்சியினர் தட்டிக் கேட்ட போது ஒருமையில் பேசி கற்களை கொண்டு வாகனத்தில் வீசி தாக்க முற்பட்டார், அப்போது பொது மக்கள் அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications