கள்ளக்குறிச்சி வன்முறை: போராட்டத்தில் மாணவி உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை- மாணவியின் வழக்கறிஞர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளி வன்முறையில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் கடல்லூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.

மாணவி மரணம்
இந்நிலையில் மாணவி சில நாட்களுக்கு முன்பு விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை போலீசார் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவரது உடலில் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

போராட்டம்
மேலும் மாணவியின் சாவு குறித்து விசாரித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை வலியுறுத்தி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்ல் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

வன்முறை
இந்நிலையில் இன்று பள்ளி முன்பு நடந்த போராட்டம் வன்முறையானது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு நடத்தப்பட்டது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சூறையாடி, வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

வழக்கறிஞர் பேட்டி
இதற்கிடையே தான் பள்ளி மாணவி தரப்பு வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர். போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications