வறண்டு போன வைகை... தண்ணீர் தொட்டியில் இறங்கிய கள்ளழகர்
வறட்சியால் வைகை ஆறு வறண்டு போனதால் நீர் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் எழுந்தருளினார் கள்ளழகர்.
மதுரை: பருவமழை பொய்த்துப்போய் கடும் வறட்சி நீடிப்பதால் வைகை ஆறு வறண்டு விட்டது. அழகர் ஆற்றில் இறங்குவதற்காக அணையில் இருந்து நீர் திறக்க முடியவில்லை என்பதால் பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி கட்டி அதில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை கொட்டி அழகரை இறங்க வைத்தனர்.
சித்திரை திருவிழாவின் மிக முக்கிய வைபவமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு வந்திருந்தனர். காணும் இடமெங்கும் மனித தலைகளாக காட்சியளித்தது.
வைகை தண்ணீர் வறண்டு போனாலும் லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்திற்கு நடுவே எழுந்தருளி அருள்பாலித்தார் கள்ளழகர்.

பக்தர்கள் வெள்ளம்
ஆண்டுதோறும் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும், இந்த ஆண்டு வறட்சியினால் வைகையில் மணல் குவியல்களே காணப்பட்டது. ஆனால் பக்தர்கள் வெள்ளத்தினால் வைகை நிரம்பி வழிந்தது.

ஆடி அசைந்து வந்த அழகர்
பச்சை பட்டு கட்டி, தங்க குதிரை வாகனத்தின் மீது ஏறி ஆடி ஆடி அசைந்து வந்த கள்ளழகரை கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் வைகையில் தண்ணீர் இல்லையே என்ற குறைதான் பல பக்தர்களிடம் காணப்பட்டது.

கடும் வறட்சி
இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர் மட்டமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி
வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மதுரை ஏ.வி. பாலம் ஆற்றங்கரையோரத்தில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டது. இந்த தொட்டியில் இறங்கி கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மழை பெய்ய வேண்டுதல்
கடந்த சில ஆண்டுகளாக சரியாக பருவ மழை பெய்யாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து என்பதே கேள்விக்குறியாகி விட்டது. கடந்த வருடம் வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்த ஆண்டு தண்ணீர் தொட்டியில் இறங்கியுள்ளார். இந்த ஆண்டாவது மழை பெய்து அணைகளில் தண்ணீர் நிரம்ப வேண்டும், ஆறுகளில் தண்ணீர் ஓட வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பது அழகருக்கு பக்தர்கள் வைத்த வேண்டுதலாக இருந்தது.












Click it and Unblock the Notifications