வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு கமல்ஹாசன் உதவிக்கரம்!
கேரளாவுக்கு கமல்ஹாசன் ரூ.25 லட்சம் அளித்துள்ளார்.
சென்னை: எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதே என தவித்து வரும் கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசனும் நிதி உதவி அளித்துள்ளார்.
பொதுவாக நடிகர் கமலின் மரியாதைக்குரிய தலைவர் கேரள மாநில முதல் பினராயி விஜயன். அதனால்தான் அவரது கொள்கை, செயல்பாடுகளை தனது பேச்சுக்களில் சொல்லி வருகிறார்.
வாழ்த்து தெரிவித்த பினராய்
கமல் ஒரு புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பின்னர் முதல் ஆளாக கமல் சென்று சந்தித்தது பினராயி விஜயனைதான். அதேபோல மக்கள் நீதி மய்யம் தொடங்கியவுடன் பினராயி விஜயன் வீடியோவில் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இவர்களுடனான மரியாதை கலந்து நட்பு நீடித்தே வந்து கொண்டிருக்கிகிறது.
அழிவை நோக்கி கேரளா
இந்நிலையில் கேரளாவையே உலுக்கி வரும் மழை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வீடின்றி, உடைமைகளின்றி, எதிர்காலம் இன்றி தவித்து வருகின்றனர். எப்போதுமே இல்லாத ஒரு அழிவை கேரளா, எதிர்நோக்கி உள்ளது. அதற்காக நிவாரண பணிகளுக்கு அனைவரும் தாராளமாக பங்களிக்க வேண்டும் என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார்.
கமல் ரூ.25 லட்சம்
அந்த கோரிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. தமிழக, புதுச்சேரி அரசு சார்பிலும், நடிகர், நடிகைகள் சார்பிலும், நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. கேரள மாநில முதல்வரின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தற்போது நடிகர் கமல்ஹாசனும் ரூ.25 லட்சம் அளித்துள்ளார்.
விஜய் டிவி ரூ.25 லட்சம்
இது போன்ற பேரிடர் காலத்தில் அனைவரும், நமது சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோளையும் கமல் முன்வைத்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் டி.வி. நிர்வாகமும் கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிவாரணநிதியாக வழங்கியுள்ளது.